சமப்படுத்தும் சமூகத்தை

வெண்முகில் கருவுற்றால்
--கறுத்திடும் நீலவானம்
நலந்தரும் எண்ணமுடன்
--பொழிந்திடும் மழைநீரும்
நனைத்திடும்பூமியினை
--குளிர்விக்கும் மனதினை
குறைவின்றி விளைந்திட
--வழிவகுக்கும் வாழ்வதற்கு !

பசுமை செழித்திட்டால்
--பரந்திட்ட உலகிற்கும்
உயிராய் உள்ளவர்க்கும்
--பலனன்றி வேறில்லை !
அழித்திடும் மரங்களால்
--உயர்ந்திடும் வெப்பமும்
குறைந்திடும் மழையளவும்
--தேய்ந்திடும் மனிதவளமும் !

நஞ்சாக இறங்குகிறது
--வஞ்சமாக நெஞ்சினில்
சாதிசமய வெறிக்கிருமி
--சீர்கெடுக்க சமூகத்தில் !
அரசியல் நிகழ்வுகளால்
--அவலங்கள் அதிகரித்து
அன்றாடம் குற்றங்களும்
--அரங்கேறுது தவறாமல் !

நோக்கமது வேறொன்று
--உள்ளத்தில் எழுந்தது
வரிகளாய் மாறும்போது
--வடிவமும் மாறிவிட்டது !
எழுதினால் எதைநானும்
--எண்ணத்தின் பயணமோ
சுற்றிச்சுற்றி வருகிறது
--சமுதாய சிந்தனையுடன் !

எத்துறையை எடுத்தாலும்
--எக்குத்தப்பு நடக்கிறது
ஏனிந்த நிலையென்றே
--நினைக்கத் தோன்றுகிறது !
நம்காலம் முடிவதற்குமுன்
--நல்லவர்கள் மறைந்திட்டு
நல்லவையும் குறைந்திட்டு
--அல்லல்கள் கூடுகிறதே !

கவலையேன் உனக்குமட்டும்
--கணநேரத்தில் கேள்விகள்
பாய்கின்றன எனைநோக்கி
--பல்வேறு திசையிலிருந்து !
வருங்காலம் வளம்பெறவும்
--வளரும் தலைமுறைக்காக
வருத்தமிடும் சிலரைப்ப்போல
--வரிசையில் நிற்பவன்நான் !

இனமொழிப்பற்று ஊட்டியோர்
--தன்மானச்சுடர் ஏற்றியோர்
பகுத்தறிவுப்பாதை காட்டியோர்
--பொதுநலத் தொண்டர்பலரென
ஆன்றோர்கள் அயர்ந்துவிட்டனர்
--சான்றோர்கள் சாய்ந்துவிட்டனர்
வரலாறுஅறியா வாலிபக்கூட்டம்
--வலைத்தளங்களில் திரிகின்றனர் !

ஒதுக்கிடுவீர் சிறிதுநேரத்தை
--ஒன்றிடுவீர் சிந்திப்பதற்கு
சிதறவிடாதீர் சிந்தைதனை
--சிந்தனைகளே சீரமைக்கும் !
சமத்துவமே சமுதாயத்தில்
--அடிப்படை அவசியமின்று !
சமதர்மக் கொள்கைகளே
--சமப்படுத்தும் சமூகத்தை !


பழனி குமார்
1௦.6.2௦16

எழுதியவர் : பழனி குமார் (10-Jun-16, 10:49 pm)
பார்வை : 337

மேலே