நீ காற்று நிதானமாகவே வீசு

#காற்று

உருவமில்லாதன் நீ..
அகிலத்தையும் ஆட்டுவிக்கிறாய் கடவுள் போல...
பாகுபாடில்லாதவன் நீ..
எல்லோரையும் வாழவைக்கிறாய் கொற்றவன் போல..

நீ இல்லாத இடமில்லை இவ்வுலகிலே..
நீ இல்லாத போது அங்கு மனிதனுக்கு வாழ்வில்லை
நீ மெல்ல வீசி கொஞ்சவும் செய்வாய்..
மிரட்டி வீசி மிரளவைக்கவும் செய்வாய்..

உன் தாலாட்டில் தான் கடல், அலை பேசுது
உன் சங்கமத்தால் புல்லாங்குழல், இசை பேசுது
வியர்வையை துரத்தும் விந்தையை கற்றுள்ளாய்..
கூரையை பிய்க்கும் வித்தையையும் கற்றுள்ளாய்..

தூக்கம் வரவழைக்கும் சக்தி உனக்குண்டு
தூசிப்புயலாய் அலறவைக்கும் புத்தி உனக்குண்டு
சூறாவளியாகி கடலுக்குள் நர்த்தனம் புரிவாய்..
மேகத்தை அழவைக்கும் கலையும் அறிவாய்..

நீ காற்று, நிதானமாகவே வீசு..
நித்தமென் மானிடரை வழிநடத்தவே பேசு..
உன்னால் கண்ணுக்குள்ளும்வரும் காணாமலும்போகும் தூசு..
உலகம் இருக்கும்வரைக்கும் முடிவில்லாததேயுன் ஆயுசு....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jun-16, 2:13 pm)
பார்வை : 2814

மேலே