தமிழ் மொழி --கட்டுரை

தமிழ் மொழி --கட்டுரை
மொழி என்றவுடன், அவரவர்களின் தாய்மொழியே சட்டென்று நினைவுக்கு வந்து ஒரு குதுகுலத்தை உருவாக்கும். அப்படிப்பட்ட மொழியைப் பற்றி கட்டுரையா! ஆச்சர்யப்பட வைக்கிறது.


ஆதிகாலத்தில் மனிதன் பேசத் துவங்குவதற்கு முன்னாலே, தமது எண்ணங்களை சைகைகள் வாயிலாகவும், தாறுமாறாக சத்தமிட்டும் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு தெரிவித்தான் என்பது வரலாறு சொல்கிறது. முதலில் பேச ஆரம்பித்த போது, அது அவனுக்கே ஒரு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளித்த்து என்பார்கள்.
பிறகு, பேச ஆரம்பித்தவைகளை குடும்பத்தாரிடமும், பிறகு குழுக்களிடமும் அதனை வெளிப்படுத்தினான். பின் அதையே ஒரு வட்டாரத்தின் மொழியாகவே ஆக்கினான். அப்படி ஆக்கி வைத்த மொழிகள்தான் அந்தந்த வட்டார மொழியாக உருவாகிற்று. மொழிக்கு மெருகேற்ற ஒரு வரையறையை உருவாக்கியதன் விளைவுதான் இலக்கண நூலாகும்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், தமிழின் முதன்முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் உருவானதாக வரலாறு சுட்டுகிறது.. தொல்காப்பியத்தினைத் தொடர்ந்து, திருவள்ளுவ பெருந்தகையின் திருக்குறள் மற்றும் பிற இலக்கியங்கள் உருவாகின.
இப்படி உருவாகிய இலக்கியங்களே தமிழ் மொழியை ”செம்மொழி” என உலக அரங்கில் தலைநிமிர செய்துள்ளது.
திருவள்ளுவரின் குறள்கள் உலக பொதுமறையாகவும், கம்பனின் காவியம் கலைஞர்களின், கவிஞர்களின் கலைப்பெட்டகமாகவும் இன்றளவில் பயன்பட்டு வருகிறது.
உலக அரங்கில், ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளதென்றால், அது நம் தமிழ்மொழியின் சிறப்புத்தானே.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தொய்விற்கு யார் காரணம். நாம்தானே காரணம். தூயதமிழில் பேசுவோரை, கிள்ளுக்கீரையாக எள்ளி நகையாடுவது சமுதாயத்தில் நிலவுகின்றதல்லவா? இது ஏன் நாம்தான் யோசிச்க வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு, நாம் ”அம்மா” என்று சொல்லிக் கொடுப்பதற்கு பதில் ”மம்மி” என்றல்லவா சொல்லி தருகிறோம். ”மம்மி” என்பது எகிப்தில் இறந்த மன்னர்களை பதப்படுத்தி வைத்து, அதனை ”மம்மி ” என்று அல்லவா கூறுகிறார்கள். ”அந்த மம்மியும், நமது தாயான மம்மியும் ஒன்றா” சிந்தித்து அல்லவா சொல்லி தரவேண்டும்.
ஏன் இந்த நிலை, பிறந்த குழந்தைக்கு, ஆரம்ப நிலையிலேயே தாய்மொழியில் வார்த்தைகளை சொல்லி தராமல், ஆங்கிலத்தில் சொல்லி தருவது வேடிக்கையான ஒன்றாக அல்லவா உள்ளது.. இப்போதே எதற்கு. அது வளர்ந்து ஆளான பிறகுதானே அதற்கு சமுதாயத்தில் ஆங்கிலம் தேவைப்படும்.
இக்குற்றத்திற்கு யார் காரணம். பெற்றோர்தானே காரணம். குழந்தைகள் தாய்மொழியில் பேச ஊக்கப்படுத்த வேண்டும்.
கல்வி பயிலும்போது, முதன்மொழியாக தாய்மொழியாக தேர்வு செய்தல் வேண்டும். கூடுதலான மொழியறிவுக்கு பிறமொழிகளை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடலாம்.
தாய்மொழியான தமிழில் பேசுவதை, எழுதுவதை முதலில் தரக்குறைவாக எண்ணுவதை விட்டொழிக்க வேண்டும்.
நம் தமிழ்நாட்டில், எத்தனையோ கவிஞர்கள், புலவர்கள், விஞ்ஞானிகள்,அறிவாளிகள் அத்தனைப் பேரும் ஆங்கிலத்திலேயேவா பேசிக் கொண்டிருந்தார்கள்.
கர்மவீர்ர் காமராஐர், கல்வியை எல்லோரும் பெற வேண்டும் என்றுதானே முயற்சி எடுத்து அதனை செயல்படுத்தினார். முதலில் தாய்மொழியைத் தானே முன்னிறுத்தினார்.
நாம் இயல்பாக பேசும்போது, தமிழோடு, பிற மொழியான ஆங்கிலம் கலப்பதை தவிர்க்க வேண்டும். ஆங்கிலமும் அல்லாத தமிழுமல்லாத ”தங்கீலிஸ்” ஆக மாறுகிறது.
அரசு அலுவலகங்களில், தமிழ் மொழியைக் கோப்புகளில் பயன்படுத்துகிறார்கள். எத்தனை அலுவலர்கள், அதனில் ஆங்கிலம் கலக்காமல் குறிப்பு எழுதுகிறார்கள். குறிப்பு தமிழில் இருக்க, அதனில் ஆணையாக ”ஆங்கில வார்த்தைகளை” உயர்அலுவலர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மைய அரசு துறைகளில், இந்தி மொழியறியாத அலுவலர்களுக்கு வாரந்தோறும் வகுப்புகள் எடுத்து, பயிற்றுவிக்கிறார்கள். ஆனால், நமது தமிழகத்தில் அதுபோன்ற நடைமுறைகள் இல்லை. ஏன் இந்த நிலை.
நாம்தான் தமிழ்மொழியில் கரைகண்டுள்ளோமே என்ற எண்ணமா? படிப்பிற்கும், வேலைக்கும் தொடர்பில்லாத வகையில் நிறைய குறைபாடுகள் உண்டு.
வாரத்திற்கு அல்லது மாத்த்திற்கு ஒரு நாள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழறிஞர்களைக் கொண்டு தமிழ்மொழியின் சிறப்பினை எடுத்து சொல்லி ஊக்கப்படுத்தலாம்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், மாணவர்களிடையே சொல்லடி பெறுவதும், சுவைகளைப் பெறுவதும் தமிழாசிரியர்களும், தமிழி பேராசிரியர்கள்தான். மற்ற வகுப்புகளில் தூங்கி வழியும் மாணவ மாணவிகள்கூட,தமிழ்வகுப்பில், தலைநிமிர்த்தி கவனிப்பார்கள். இதற்கு காரணம்.
தமிழாசிரியர்கள் உளவியல் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். பாடத்தை எப்படி நடத்தினால், மாணவர்களுக்கு சேரும் என்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.. தமிழாசிரியர்களை கேலியும் செய்வார்கள். துன்பம் வந்தால் தோள்களும் கொடுப்பார்கள் மாணவ மாணவியர்கள்..

நமது கல்வி திட்டத்தில் முன்பு முதல் வகுப்பில் சேர்வதற்கு ஐந்து வயது நிறைவு அடையவேண்டும் என்று விதி வைத்திருந்தார்கள். , நாளடைவில் கல்வி வியாபார மாறிவிட, குழந்தை கருவில் இருக்கும்போதே, கல்வி கூடத்தில் வரிசையில் நின்று நுழைவு அனுமதி பெற்று வைத்து விடுகிறார்கள் பெற்றோர்கள்.
மோகம், இது ஆங்கில மோகம். தன் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால்தான் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது பேதமை அல்லவா.
சமுதாய சூழலுக்கு வேண்டுமானால் ஆங்கிலம் பயன்படலாம். ஆனால், நம் மொழியை மட்டுப்படுத்தி, ஆங்கிலத்தை வளர்ப்பதில், நமக்கு நாமே தலையில் தீயை வைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.
தமிழ்நூல்களைப் படிக்கின்ற பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். எவ்வளவோ தேவையற்ற ஆடம்பர செலவுகளை செய்கிறோம். ஆனால் நூல்களுக்கு செலவு செய்வதில் சிக்கனத்தை மேற்கொள்கிறோம். தமிழ்நூல்களில் வாழ்க்கைக்கு தேவையான எவ்வளவோ விவரங்கள் உன்ளன.
திருக்குறளில் உலகவியலும், கம்பனின் காவிய நயமும் காட்டாதா, ஆங்கில மொழி காட்டுகிறது.
முண்டாசு கவிஞன் பாரதி முதல் எல்லா கவிஞர்களும் தமிழைப் போற்றுவதற்கு காரணம். தமிழ் என்றவுடனே ஒரு இனிமைத் தோன்றுகிறது. அந்த தமிழுக்கு ஒரு கடவுளையும் உருவாக்கி வைத்துள்ளனர்.
அவர் முருக கடவுள். முருகு என்றால் அழகு, அழகு என்றால் தமிழ். அப்படிப்பட்ட தமிழை நாம் புறந்தள்ளலாமா? தந்தை சிவபெருமானுக்கு குருஉபதேசம் செய்தவர் தமிழ் கடவுள் முருகன்தானே. ”ஓம்” என்பதன் பொருளே… அகாரம், உகாரம், மகாரம் அதாவது அ, உ, ம இந்த முன்றும் சேர்ந்த்துதானே ”ஓம்” ஆகும்.

யோக கலையில், ”ஓம்” என்ற சொல்லுக்கு அதிமுக்கியத்துவம் தருவார்கள் யோகிகள். சித்தர்கள் சொல்லி தந்த கலையல்லவது இது.
”அ” என்ற சொல்லும்போது மூலாதாரத்திற்கும், ”உ” என்று சொல்லும்போது உச்சிக்கும், மீண்டும் ”ம்” என்னும்போது மூலாதாரத்திற்கே மூச்சுகாற்று பயணிக்கிறது. இதை அனுபவித்தால்தான் தெரியும். ”ஓம்” என்று மனதிற்குள் உச்சரிக்கும்போது நமது சுவாசமானது மிகமென்மையாக இழையோடி, இழையோடி, பிரபஞ்சத்திற்கு அப்பால் அல்லவா இட்டுசெல்கிறது.
அப்படிப்பட்ட தமிழை நாம் புறந்தள்ளலாமா?
தமிழ் நூல்கள் வாங்குவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
நூலகங்கள் செல்வதை ஒரு பழக்கமாக ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை திங்கள்தோறும் நூல்நிலையத்திற்கு அழைத்து சென்று நூல்கள் படிப்பதை பழக்கமாக்க வேண்டும்
தமிழ்நூல்களில் உள்ள ஆழமான கருத்துக்களை குறிப்பெடுத்து கொள்ள வேண்டும்.
இந்த தள்ளாத வயதிலும், தமிழை தளராது வைத்து போற்றுகின்ற முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்மொழிமீது பற்றுள்ளதால்தானே பழுத்தபழமான பின்னும் பட்டிதொட்டியெங்கும் தமிழைப் போற்றுகின்றார்.
சிறப்பு வாய்ந்த செம்மொழியான தமிழின் அழகுக்கு அழகாக அணிசேர்க்க வேண்டாமா. அதற்கான சிறுகவிதையும் இங்கே உள்ளது. படித்து மகிழுங்கள். தமிழோடு வாழுங்கள். தமிழைப் போற்றுங்கள்.




தளரா தமிழோவியமே!

அவளது சிரிப்பினில்
அவளணிந்த கொலுசுள்
ஒலிக்க மறந்தனவே!

அவளது விழியசைவில்
அல்லிகுளத்து மீன்கள்
தன்னினமென தாவினவே!

அவளது கனியிதழ்கள்
அருஞ்சுவைக் கனிகளென
பறவைகளும் கொத்தினவே!

அவளது இடையில்
அருவிநீர் குடமோ
அழுந்த அஞ்சினவே!

அவளது மொழியில்
அந்தரலோக கானமும்
அஞ்சித்தான் ஒதுங்கினவே!

அவளின் பாதங்களில்
அழகிய மலர்கள்
மலர் பாதையானதே!

அவளது அழகிலே
அவளது ஒயிலிலே
ஆழ்ந்துதான் போனேனே!

ஏன்தான் இவ்வளவு
வர்ணணை
இனிய காதலியா ?
என்றா கேட்டீர்கள்!
அவள்தான் என்றன்
தளரா தமிழோவியமே!

தமிழின் சிறப்பை சொல்லி கொண்டே போகலாம். ஔவையாரின் ஆத்திசூடி முதல் இன்றைய கவிஞர்கள் வரை தமிழ்மொழிக்கு மகுடம் சேர்த்து கொண்டே இருக்கிறார்கள்.

கவிஞர் கண்ணதாசனின் திரைப்பட பாடல்களில் இல்லாத கவிநயமா, கண்ணதாசன் தன் அனுபவத்தினாலேயே கவிதைகளை பாடல்களாக எழுதி சாதனை படைத்துள்ளார். இன்றைக்கும் கவிஞர் கண்ணதாசனின் பாடலை இசையமைப்பாளர் இளையராஐவின் இசையோடு கேட்டால் மெய்மறந்து போவோம்.

அறிஞர் அண்ணாவின் அடுக்குமொழி சொல்லாட்சி அருமை அல்லவா. சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவனைக் கூட அவரது அடுக்குமொழி சொல்லாட்சி தட்டியெழுப்ப வைத்த்து அல்லவா?



தனிப்பாடல்களில் புலவர்கள் செய்யாத நையாண்டியா இன்றைய சமுதாய்ம் செய்கிறது. ஒரு புலவர் ஔவையாரை ஆடியே என்பது போல பாடல் பாட, ஔவையாரும், அடா என்பது போல வார்த்தைகளில் விளையாடினார் அல்லவா? அப்படிப்பட்ட தமிழை வளர்க்க வேண்டாமா நாம்.

பழைய காலத்தில் சங்கங்கள் இருந்த்தாக வரலாறு சொல்கிறது. ஆனால் இப்போதோ தமிழ் சங்கங்கள் காணவில்லை. சங்கங்கள் அமைத்து தமிழை வளர்க்க செய்யலாமே.

அகநாநூறு, புறநாநூறு என்று நிறைய நூல்கள் நூலகத்திலேயே முடங்கி போய் உள்ளன. அவற்றை எடுத்து மாணவர்களுக்கு திங்கள் தோறும் தமிழ் பேராசிரியர்களைக் கொண்டு உரை நிகழ்த்தலாம். இன்னும் நிறைய செய்யலாம். தமிழ் வளர…வளர நாமும் வாழ்வோம். தமிழும் வாழும்.


--- கே. அசோகன்.

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (30-Jun-16, 7:45 pm)
பார்வை : 1127

மேலே