தென்றலே வந்து தீண்டுவதேனோ

தென்றலே வந்து தீண்டுவதேனோ ?
வருகிறேன் என்று சொல்லிச் சென்றவள்
இன்னும் வரவில்லை ...
முடிந்தால் சென்று அழைத்து வாருங்கள் !

மலர்களே மலர்ந்து சிரிப்பதேனோ
அவள் முகத் தாமரை காணாமல் தவிக்கிறேன்
நீங்கள் அறியவில்லையோ ?
முடிந்தால் அவள் வர விரியா மொட்டாய் தவமிருங்கள் !

நிலவே வானில் உல்லாசமாக நீந்துவதேனோ ?
நிலவு தோற்கும் என் எழிலவள் எங்கு சென்றாளோ ?
எனக்குத் தெரியவில்லை
முடிந்தால் அழைத்துவா இல்லையேல் முகிலில் மறைந்து போ !

அலைகளே இன்றும் இசை பாடுவதேனோ ?
கலைந்தாடும் கருங்க்கூந்தல் என் அமுதச் சிலையவள்
சென்ற தடம் தேடுகிறேன்
விரைந்தோடி படகொன்றில் என்னிடம் கொண்டு வந்து சேராயோ ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Aug-16, 5:07 pm)
பார்வை : 104

மேலே