இதயக் கோட்டை ஆளும் இளவரசி
என் மடியில் தவழும் தேவதையே!
மனசெல்லாம் பூத்த தாமரையே!
தந்தை எனும் பதவி உயர்வு
நீ வந்ததால் நானும் பெற்றேனே!
வாழும் வாழ்வின் அர்த்தங்களை
அழகாய் நீயே சொன்னாயே!
என்னுள் எட்டிப்பார்க்கும்
துன்பங்களை எல்லாம்
எட்டி உதைத்தாய்
உன் புன்னகையால்.
அன்பு எனும் நீரூற்றை
அள்ளிப் பருகிடப் பருகிட
வற்றாத ஜீவ நதியாய்
வாழ்வெல்லாம் வழிந்தோடினாய்.
அப்பா எனும் ஒற்றைச் சொல்லில்
ஆயிரம் அர்த்தங்கள் உணரச் செய்தாய்!
பாசம் எனும் பாதை வழியே
கண்ணை மூடி பயணிக்கச் செய்தாய்!
என் கைப்பிடித்து
அழைத்துச் சென்றாய்
அன்பு எனும் நதி வழியே
ஆனந்தம் எனும் பெருங்கடல் நோக்கி.
தந்தையாய் நான் பிறந்தேன்
நீ பிறந்த நாள் முதலாய்.
விந்தையாய் இருக்குதடி
நீ காட்டிடும் புது உலகம்.
முழு நிலவும் தோற்றுப் போகும்
முகம் மலரும் தருணத்தில்.
என் இதயம் எனும் கோட்டை ஆளும்
இளவரசி என்றும் நீதானே! ........