வசந்தம் வந்தது
வயல் வரப்புக்களின் இடையே நடந்து கொண்டிருந்தாள் மணிமேகலை. எப்பொழுதும் போல் அவள் மேனியைத் தழுவிச் சென்றது மாலைத் தென்றல். ஆனால் அதை உணர்ந்து ரசிக்கும் நிலையில் அவள் இல்லை. யாருமற்ற அவளது இந்த இருபத்து நான்கு வருட வாழ்வில் அவள் அனுபவித்த கஷ்டங்களை எல்லாம் தூசு என எண்ணும்படியாக பெரிய இடி ஒன்றே அவள் வாழ்வில் விழுந்துவிட்டதே!
அழகிய வயல்கள் நிறைந்த பூஞ்சோலைக் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் தான் மணிமேகலை. பிரசவத்தில் தாயை இழந்தாளாயினும் தாய்க்குத் தாயாக தாய் வழிப் பாட்டி கிடைத்தாள். தந்தையோ மறுமணம் செய்து கொண்டார். மணிமேகலையின் பத்தாவது வயதில் பாட்டி காலமானார். அப்போது அவளுக்கிருந்த ஒரே சொந்தமான தந்தையிடம் சேர்க்கப்பட்டாள். இதற்கிடையில் சிற்றன்னையின் மூலமாக அவளுக்கு மூன்று சகோதரர்கள் பிறந்திருந்தனர்.
'அன்றாடம் சாப்பாட்டுக்கே அவதிப்படும் நிலை. இதில் இவள் வேறா?' என்று முறைத்துக் கொண்டாள் சிற்றன்னை. ஆனாலும் ஊரார் பேச்சுக்குப் பயந்து மணிமேகலையை ஏற்றுக்கொண்டாள். அன்றிலிருந்து தினம் தினம் சிற்றன்னையிடம் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டாள் மணிமேகலை. 'வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்' என்பது போல் நடத்தப்பட்டாள். இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல இருந்து கொள்வார் அவளின் தந்தை.
தினம் தினம் துன்பங்களோடு வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு இன்பச் செய்தி ஒன்றை காலையில் சிற்றன்னை சொன்னாள். "கழுதை! இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வாறாக. மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடம். அடக்கமா நின்னுக்க." அதட்டலாகத் தான் தகவல் சொன்னாள் என்றாலும் காதில் தேன் வந்து பாய்வது போல் உணர்ந்தாள் மணிமேகலை. 'நம்மைத் தேடி நம் கண்ணாளன் வந்து விட்டான். இனி நான் வாழ்வில் கண்ணீர் விடவே தேவை இல்லை. என்னை ராணி போல் வாழவைப்பான். இத்தனை நாள் நான் வாழ்ந்த நரகத்திலிருந்து என்னை விடுவித்து கூட்டிப் போகப் போகிறான். பிள்ளையாரப்பா! ரொம்ப நன்றி பிள்ளையாரப்பா. இவ்வளவு நாளா என்ன நீ தவிக்க விட்டதெல்லாம் இதுக்காகத் தானா. இது தெரியாம உன்ன ரொம்ப திட்டிட்டேன்ல. மன்னிச்சிடுப்பா. மனசில எதையும் வச்சுக்காத என்ன?' மனதோடு கடவுளிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தாள் மணிமேகலை.
கொஞ்ச நேரம் கழித்து உறவினர்கள் சூழ மாப்பிள்ளையும் வந்தான். மனம் படபடக்க எட்டிப் பார்த்தாள் மணிமேகலை. நான்கு நடுத்தர வயதுப் பெண்கள். ஒரு மூதாட்டி. இரண்டு வயதான ஆண்கள். அவள் வயதுப் பெண்கள் மூவர். மாப்பிள்ளை என யாருமே இல்லை. அவள் முகம் ஏமாற்றத்தில் மாலைத் தாமரையாக கூம்பியது. 'ஏன் வரவில்லை அவர்? ஒரு வேளை இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லையோ!' அவள் மனதின் எண்ணங்களுக்கு தடை போடுவது போல சிற்றன்னை உள்ளிருந்து அழைத்தாள். "மணிமேகலை! இந்தாம்மா இந்த பாயாசத்தை மாப்பிள்ளைக்கும் அவுக சொந்தக் காரங்களுக்கும் குடும்மா..." சிற்றன்னையை அறிந்த காலத்திலிருந்து அவர் அவளது பெயரை உச்சரித்ததும் இல்லை. அவளிடம் பாசமாகப் பேசியதுமில்லை. ஆனாலும் இன்றைய சிற்றன்னையின் பேச்சு அவள் மூளையை எட்டவில்லை. மாறாக அவர் மாப்பிள்ளைக்கு பாயாசத்தை கொடுக்கச் சொன்னது தான் மனத்தைக் குழப்பியது. என்றபோதிலும் அமைதியாகச் சென்று வந்தவர்களுக்கு பாயாசம் பரிமாறினாள். அவர்களில் ஒரு பெண், "இந்தாம்மா மணிமேகலை, இவரு தான் உன் வருங்காலப் புருசன். நல்லா பாத்துக்கோ." காட்டிய திசையில் பார்த்தவளுக்கு இதயத்தை யாரோ உளி கொண்டு தாக்குவது போல் வலி உண்டாயிற்று. கண்ணீர் கண்களை மறைக்க உள்ளே ஓடிச் சென்று பழைய பொருட்கள் இருக்கும் அறையில் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள். வந்தவர்கள் வெட்கத்தினால் தான் பெண் ஓடி விட்டால் என்று நினைத்து தங்களுக்குள் சிரித்து கிண்டல் பேசிக் கொண்டார்கள்.
திருமணம் பேசி முடித்தவுடன் எல்லோரையும் அனுப்பி வைத்து விட்டு வந்த சிற்றன்னையின் காலில் விழுந்து கதறினாள். "சித்தி, எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம் சித்தி. நான் காலம் பூராவும் உங்களுக்கு வேலை செஞ்சிட்டு இங்கயே இருந்திடுறன் சித்தி." அவளது அழுகையை கண்டு கொஞ்சமும் இரக்கப்படாமல் அவள் மார்மேல் ஓங்கி உதைத்தால் சித்திக்காரி. "ஏண்டி, அநாதை நாயே. உன்ன மாதிரி ஒரு தரித்திரத்தை கூடவே வச்சிட்டு ஓட்டாண்டியவே இருக்கச் சொல்றியா எங்கள? ஏதோ எங்க நல்ல காலம் அவரு பொண்டாட்டி செத்துப் போனா. இல்லன்னா உன்னப் போய் கட்டிக்க ஆசைப்படுவாரா? அதுவும் சும்மா இல்லடி. பத்தாயிரம் ரூபா காசு எங்களுக்கு தர்றதா சொல்லி இருக்கார். ஒழுங்கு மரியாதையா அவரக் கட்டிக்கிட்டு அவர் பிள்ளைங்களுக்கு அம்மாவா இருக்கிற வழியப் பாரு." அவள் வயதுப் பெண்களுக்கு தாயாக இருக்கச் சொல்லும் அரக்கியை கொல்ல வேண்டும் போல் மனதில் வெறி எழுந்தாலும் செயலற்றுக் கண்ணீரில் நனைந்தாள்.
அழுதழுது கண்ணீர் வற்றிப் போன நிலையில் வழக்கம் போல் மாலையில் காலாற வயல்வெளியில் நடக்க ஆரம்பித்தாள். ஆனால் இன்று வழக்கத்தை விடவும் அதிகமாக மனமும் உடலும் மரத்துப் போயிருந்தது. முடிவற்று நடந்து கொண்டிருந்த அவளது கால்கள் வரப்பின் ஓரமாக இருந்த கிணற்றின் அருகில் வந்ததும் தாமாகவே நின்று கொண்டன. கடைசியாக மனத்தில் அம்மாவையும் பாட்டியையும் எண்ணிக் கொண்டவள் கண்களை இருக்க மூடி வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணிய வேளை ஒரு வலிமையான கரம் அவளைப் பற்றி இழுத்தது. வேகமாக இழுத்ததில் தடுமாறி விழப் போனவளை தன மறு கரத்தால் அணைத்தது அந்த நெடிய உருவம். மிரட்சியுடன் நிமிர்ந்து பார்த்தவளை கனிவான கண்கள் குறும்பாய் பார்த்துச் சிரித்தன. அவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை. எதிரே அவளது தந்தையின் ஒன்றுவிட்ட அக்கா மகன் வருணன் நின்றிருந்தான்.
மணிமேகலை பிறக்கும் முன்பாகவே நகருக்கு குடியேறிவிட்டவர்கள், இவளது பதினாறாவது வயதில் ஊரையும் உறவுகளையும் பார்க்கவென ஊருக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது தான் மணிமேகலை வருணனை பார்த்தாள். ஆனால் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனும் ஒரு சிரிப்போடு நகர்ந்து விட்டான். ஆனால் அந்தச் சிரிப்பில் ஏதோ மாயத்தை உணர்ந்தாள் மணிமேகலை. ஏதோ புரியாத உணர்வு அவன் மேல் ஏற்பட்டது. ஆனால் காலமும், அவளது செயலற்ற நிலைமையும் அந்த உணர்வு என்னவென்று புரியவிடாமலே செய்து விட்டன. இப்பொழுது மீண்டும் அவனது மாயச் சிரிப்பை கண்டபோதோ அன்று புரியாததெல்லாம் இன்று புரிய ஆரம்பித்தது. தன்னையறியாமலே அவனை அணைத்து அழ ஆரம்பித்தாள். அவளது அழுகை தணியும் வரை அவனும் எதுவும் பேசவில்லை. மெல்ல அழுகை நின்றபோது வெட்கம் வந்து குடிகொண்டது. தான் செய்ததை எண்ணி வெட்கித்தவளாகி விலகப் போனவளை விடாது மேலும் இறுக அணைத்தான். நம்ப முடியாமல் கண்களை விழித்து அவனைப் பார்த்தவளை, "மணிமேகலை! காலம் பூராவும் என்கூட என் மனைவியா வர உனக்கு சம்மதமா?" விடையை தெரிந்து கொண்டே கேட்கும் பாவனையில் கேட்பவனை இன்னமும் நம்பாது நோக்கினாள்.
"நம்பமுடியலையா? மேகலை, உன்ன முதல் முதல்ல பார்த்தப்ப என்னோட அம்மாவ பார்ப்பது போலவே இருந்திச்சு. இந்த ஊரை விட்டுப் போனதும் கொஞ்சநாளா உன்னப் பத்தியே நினைச்சிட்டு இருந்தன். ஆனா கொஞ்சக் காலத்துல உன்ன மறந்துட்டன். ஆனா நேத்து அம்மா எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கணும்னு கேட்டப்ப என்னை அறியாமையே உன் முகம் என் மனசுல தெரிஞ்சிச்சு. அப்பத்தான் நான் உன்ன விரும்புறேன்னு புரிஞ்சிச்சு. அம்மா கிட்ட சொன்னேன். அவங்க சம்மதத்தோட தான் இப்ப உன்னப் பாக்க இங்க வந்திருக்கன். உன் வீட்டுல இன்னிக்கு நடந்ததெல்லாம் கேள்விப்பட்டன். உன் தங்கச்சி சொல்லித்தான் உன்னைத்தேடி இந்த வயலுக்கு வந்தேன். நல்லவேளை அந்தக் கடவுள் அருளால உன்ன முழுசாவும் பார்த்தன். இப்ப சொல்லு, என்ன நம்பி என்கூட இப்பவே என் வீட்டுக்கு என் மனைவியா வரியா?" ஆத்மார்த்தமாக அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் அவன் கைகளை தன் கண்ணில் ஒற்றி அழ ஆரம்பித்தாள். "என்னை பிடிக்கவில்லை என்றால் வாயாலயே சொல்லலாம். இப்படி அழத் தேவை இல்லை." கோபமான குரலில் அவன் கூற , "இல்லை. உங்களை பிடிச்சிருக்கு." என்று அவசரமாக கூறிக் கொண்டு நிமிர்ந்தவள் அவன் கண்ணில் தெரிந்த குறும்பைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.
"இப்படிக் கோபமாகப் பேசுவது போல் நடித்தால் தான் அம்மணி வாயையே திறப்பீர்கள் போலிருக்கிறது" என்று கூறி நகைத்தவனை தள்ளி விட்டு ஓடினாள் மணிமேகலை. ஒரு எட்டில் அவளைப் பிடித்து கைகளில் ஏந்தினான் வருணன். "நன்றி பிள்ளையாரப்பா." அவள் மனம் மகிழ்வுடன் பிள்ளையாரை தரிசித்தது.