கண்ணன் திருப்புகழ்

சந்தக்குழிப்பு
``````````````
தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத் - தனதானா

சீலமு லாவிய கோபியர் நெஞ்சத்
தோவிய மாயுறை மோகன னின்பொற்
சேவடி யேகதி யேயென யின்புற் - றிடுவேனோ

தேடியு மோடிடு பாசமு டன்சிட்
டாகது வாரகை யேகிவி ளங்கித்
தேவதை போலெழி லாளைவி ரும்பித் - தடுமாறும்

பாலனை மாயனை நேசமு டன்பித்
தானது போலுள மாகிட வஞ்சிப்
பாடலொ டாடிடு வோனைவ ணங்கிப் - பணிவேனே

பாவைய ராசையி னாலுனை நம்பிப்
பாசுர மேதின மோதிம யங்கிப்
பாவன மேபுரி ராதையி னன்பைப் - பெறுவோனே !

சோலையி லேகுழ லூதம யங்கித்
தோழியர் கூடிட லீலைநி ரம்பித்
தோகையர் பூவிழி பேசிட அந்திப் - பொழுதோடே

சூடிய பூவது வாடிடு முன்பட்
டாடையி லேயொரு சேடிந டுங்கிச்
சோதனை தீரவி னாவிடு கெஞ்சிக் - கனிவோடே

கோகுல வாசனை மாலையில் கொஞ்சிக்
காதலி னோடுகு லாவிட வொன்றிக்
கூடிய கோபிய ரோடும னஞ்சற் - றிளகாதோ

கோமள னேமது சூதன னின்பொய்க்
கோபமு மேயறி யாதவ னன்பிற்
கோதையி னோடுற வாடும னந்தப் - பெருமாளே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Nov-16, 11:57 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 74

மேலே