நான் காதலிக்கிறேன்

இடை இடையே உன் முகம் காட்டு
இல்லையேல் வாடிடுவேன் வறட்சியிலே!
மடல் அட்டையோடு காத்திருப்போர் போல
நானும் மரக்கன்றுகளோடு!
என் உடலெங்கும் மழையாய் முத்தமிடு
நாம் இணையும் இன்பத்தின் உச்சம் அது!
இதழோடு இதழ் இணைவதைப் போல
மண்ணோடு நீ இணைந்துவிடு!
ஏர் உழுத எம் நிலக் கரங்களின் விரல் இடையில்
நீராய் உன் விரல்களை கோர்த்திடு!
வறண்டோடும் எம் ஆறுகளிடம் நீயும்
புரண்டோடி புணர்ந்திரு!
களவு முடிந்து விலகிடுவானோ – ஐயம் வேண்டாம்
உழவு என்றும் எந்தன் உயிரில் கலந்தது!
மோகம் முடிந்தபின் விலகினாலும்
தாகம் எனும்போது தயங்காமல் தீர்த்துவிடு!
தையிலே கரம்பிடிக்க விளைச்சளோடு காத்திருப்பேன்
ஐய்ப்பசியில் விட்டுச்சென்றால் மார்கழியில் மாண்டிடுவேன்!
கன்னியரை காதலிக்கும் காளையர் மத்தியில்
நானோ தண்ணீரைக் காதலிக்கிறேன்!
– குமரேசன் செல்வராஜ்