இனிமேல் மழைக்காலம்
காந்தள் மலரே....
செங்காந்தள் மலரே....
சிறுகாற்றின் அசைவில்
நீ மெல்லத் தீண்டினாயே
உனைக் கண்டேன்
அடியே
உயிரெல்லாம் நிறைந்தாயே.....!
மலர் தீண்டும் உணர்வா இது
மதயானை தோற்றிடும்
மண் மீது நீயொரு
மகத்துவம் தானே.....!
ஒரு நாளும் மறவாது
எந்நாளும் உன் நினைவு
உள்ளத்தின் இனிய சுமையாய்
நீ மாறிப் போனாயே.....!
உன் பேரில் ஓர் ஈர்ப்பு
உன் பேச்சிலும் ஓர் ஈர்ப்பு
புவி சுற்றும் நிலவாக
அடியே
என் நினைவில் நீ.....!
கண்மூடிடும் காலத்தில்
விரல் தீண்டிடும் நேரங்கள்
இதழ் சேர்ந்திடும் ஓசைகள்
கனவில் எனை ஆளுதே.....!
கனவில் வரும் நெருக்கம்
நினைவிலும் வரும் நெருக்கம்
ஏனோ
நனவில் இன்னும் இல்லையே.....!
உன்மேல் நான் கொண்ட
காதலெனும் பேர் கொண்ட
தீராத அன்பென்றும் - எனக்கு
தீராத நோய் தானே.....!
அனல் நீ தானே
புனலும் நீ தானே
என்மீது மலர் வீசிடும்
நறுங்காற்றும் நீ தானே.....!
ஒளி நீ தானே
இருளும் நீ தானே
தூய் மொழியில் கொஞ்சும்
நற்கவியும் நீ தானே.....!
இமை மூடினாலும் நீ
இருள் மேவினாலும் நீ
நிலைமாறாத உனதுருவம் என்றும்
என்னுள் நான் காண்கிறேன்.....!
உனதொரு பார்வை பட
சிறு மொழி விழ
ஒரு தொடுதல் நிகழ
இனிமேல் மழைக்காலம்.....!
என் காலமெலாம்
இனிமேல் மழைக்காலம்.....!
இனிமேல் மழைக்காலம்.....!
- கிரி பாரதி.