புத்தாண்டு வருக புது வாழ்வு வருக

சித்திரை மங்கையே வாராய்
சிந்தனை தூய்மை தாராய்
நித்திலம் யாவும் நீங்கா இன்பம்
நித்தம் அளித்திட நீ இங்கு வாராய்

வறண்ட நிலங்களில் வளம் திரும்பிடவே
வருணனின் வரம் பெற்றிட வேண்டும்
ஏர் பிடிக்கும் உழவர்க்கு ஏற்றம் தந்திட
ஏ விளம்பி நங்காய் அருள் செய்திட வேண்டும்

தன்னலம் இல்லா தன்மை ஓங்கிட வேண்டும்
தரணியில் அமைதி தவழ்ந்திட வேண்டும்
நாட்டினில் வளர்ச்சி பெருகிடவேண்டும்
நங்கையர் நலனை காத்திட வேண்டும்

கனவுகள் யாவும் மெய்பட வேண்டும்
களவும் கொள்ளையும் ஒழிந்திட வேண்டும்
கருணை கண்ணியம் ஓங்கிட வேண்டும்
கல்வியும் கலையும் தழைத்திட வேண்டும்

நேசம், பாசம், அன்பு நிறைந்திட வேண்டும்
நிகரில்லா பேரின்பம் பெருகிட வேண்டும்
போர் பகை என்னும் இருளது நீங்கி
பாரெங்கும் ஒற்றுமை பரவிட வேண்டும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (14-Apr-17, 12:14 pm)
பார்வை : 294

மேலே