வாழ்வாய் நெஞ்சே
என்றுமுனக் கிதுசொல்வேன் என்றன் நெஞ்சே !
. ஏழைபோல் இனிமருள்தல் நிறுத்தி வைப்பாய் !
தென்றலென உனைத்தீண்டிக் குளுமை தந்து
. தேவையெலாம் தீர்த்துவிடத் தாயு முள்ளாள் !
மின்னையொரு கொடியாக்கி விண்மீன் தம்மை
. மிளிர்கின்ற மணிகளெனத் தரித்தி ருப்பாள் !
கன்னலதன் சாற்றினைத்தன் குரலிற் கொண்டாள்
. கலைமூக்குக் குத்தியென நிலவைக் கொண்டாள் !
தத்துவங்கள் அனைத்தினுக்கும் முடியா மந்த
. தாயிருக்கும் தத்துவத்தை அறிவாய் நெஞ்சே !
சுத்தசிவம் வைணவம்கௌ மாரம் சாக்தம்
. சௌரங்க ணாபத்யம் ஸ்மார்த்த மென்றே
அத்தனைக்கும் உகந்ததுதான் சுயத்தின் ஞானம்
. அதையுணர சக்தியதன் விளக்கம் வேண்டும் !
இத்தனைக்கும் உழலாமல் உன்றன் வேலை
. இயற்றிக்கொண் டேயிருந்தால் வெற்றி காண்பாய் !
எல்லாமும் நீயாக எண்ணங் கொள்வாய் !
. எனதென்று யாதையும்நீ ஏற்றி டாதே !
கல்லாமல் இருப்பதுபோல் பாவ மில்லை
. கண்மூடிச் செல்வதெலாம் பாதை யாகா !
நில்லாமல் அன்றாடம் திரிந்து லாவி
. நீயிருக்கும் செய்கையினால் பயனும் இல்லை !
சொல்லாலும் மனத்தாலும் தேகத் தாலும்
. சோதிமயம் கண்டிடலாம் அமைதி கண்டால் !
இந்தநிலை ஓர்ந்திடுவாய் இயக்கம் கண்பாய் !
. இடிதாங்கும் வலிமையெலாம் நீயும் பூண்பாய் !
சொந்தமென இவ்வுலகில் எதுவு மில்லை
. சொத்தென்று படுவதெலாம் தொடரும் ஊழே !
எந்தநிலை எய்திடினும் யாவ ருக்கும்
. ஏற்றவனாய் நல்லவனாய்த் தோன்ற வேண்டில்
பந்தினைப்போல் துள்ளாமல் பக்கு வத்தின்
. பாடத்தைக் கற்றிடுவாய் ! பலமுங் கொள்வாய் !
எப்போதும் ஒன்றேபோல் இருத்தல் தீர்வாய் !
. எந்நாளும் புதியவுரு புதிதென் றேதான்
செப்புகநீ ! வருங்காலம் தன்னை யெண்ணி
. செலவாக நிகழ்காலம் கழித்தி டாதே !
இப்பொழுதை இன்றேநீ வாழ்வாய் ! நாளை
. இனிதாகும் அதுபற்றி எண்ணல் வேண்டா !
தப்பாது சக்திபெயர் சாற்றிச் செல்வாய் !
. சங்கடங்கள் நேராது ! வாழ்வாய் நெஞ்சே !
-விவேக்பாரதி