இரவின் கவிதை

இரவெனுங் கவிஞன் வருகின்றான்
இதனை என்னுள் தருகின்றான் !

செக்கராய் விரிந்த வானம்
. சேர்த்தெழில் கூட்டும் மேகம்
பொக்கெனச் சிரித்துச் சாய்ந்த
. பொதுவெனும் ஒளியின் தேவன் !
திக்கெலாம் தென்றல் கோலம்
. திடுமென இருட்டிக் கொண்டு
கக்கிருள் வானுக் குள்ளே
. கவிதைகள் வழங்கு கின்றான் !

முதலிலே மீன்க ளென்னும்
. முத்தகச் செய்யுள் கோடி
பதித்தவன் வான்நி றைத்தான் !
. பார்ப்பவர் வியக்கும் வண்ணம்
கதிரதன் ஒளியில் கொஞ்சம்
. கடனதைப் பெற்றுக் கொண்டு
புதிரெனத் தோன்று மந்தப்
. புதுநிலா நூலைத் தந்தான் !

நமையெலாம் கவிதை செய்ய
. நடத்திடும் தாயா மந்த
உமையவள் தானோ இங்கும்
. உயர்கவி நல்கு கின்றாள் ?
அமைவது யாரின் வித்தை ?
. அழகுகள் யாரின் விந்தை ?
சமைப்பதா ரெனினும் ! ஆகா !
. சகலமும் பெற்று வாழ்க !

- விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-May-17, 2:29 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 82

மேலே