என்றும் என் நினைவில் நீ
என் உயிர்த் துடிப்பின் உருவே
உலவுகிறாயென் நினைவில் நீயே...
உன்னிடம் கடன் பெற்றே
உதித்திட்ட உயிரோயிவள்
உன்னிடமே மீள்கிறாள் - மீண்டும்
தவணை முறையே...
கதிரவன் மண்ணில் - கதிர்
பரப்பும் கணம் முதலாய்
நிலவின் கிரணங்கள் - நிலம்
நனைக்கும் பொழுதுகளெல்லாம்
புதுக்கதைகள் உரைக்கிறாய்
காதோரம் மெதுவாய்...
கண்டநாள் முதல் நான்
கனவிலும் மறந்ததில்லை உன்னை...
கரை தொட்டு - நலம்
விசாரிக்கும் அலைகளாய்
ஐந்தரையடி தேகத்துள்
ஓயாமல் அலைந்து திரிகிறாய்...
அசைகின்ற கடிகார முள்ளில்
கரைகின்ற நாழிகையிலும்
வரைகின்ற வாழ்க்கை கோலத்தின்
மறைந்திருக்கும் புள்ளிகளிலும்
ஒளிந்திருக்கும் என்னவனே...
மறந்தும் நான் உன்னை
மறந்திட நினைப்பதில்லை...
கலந்துவிட்டாய் நினைவலைகளின்
கருவறையிலும் நீயே...
இனி உதிக்கும் நினைவுகளும்
உன்னைத் தான் பிரசவிக்கும்...
என்றும் என் நினைவில் நீ!!!..