அனிதாவின் குரல்

பன்னிரண்டு வருடம்
படித்த என்னை,
படிக்காத பக்கங்கள்
சோதித்து பார்க்கும்
எனத் தெரியாது!

எனதறிவை நீட்
ஏளனம் செய்யும்
எனத் தெரியாது!

விலக்கு வாங்கித்
தருவோமென்பதெல்லாம்
ஏமாற்று அரசியல்
எனத் தெரியாது!

பள்ளிப்படிப்பே
பெருங்கனவான
எனக்கு,
பயிற்சி வகுப்பு
பயில வேண்டும்
எனத் தெரியாது!

கனவுகளை
கலைத்து விட்டு
கிடைத்ததை படித்து
காசுக்காக
ஓடத் தெரியாது!

பிணி காக்கும்
பணி செய்ய
பணம் போதுமெனத்
தெரியாமலா
பன்னிரண்டு வருடம்
பகலிரவாய் படித்தேன்?

நீட் நீட் என போராடி
நீட்டி படுத்திருக்கிறேன்
பிணமாய்!

தற்கொலை செய்த
கோழை அல்ல நான்!

அரசும் அரசியலும்
ஆட்டிப்படைத்ததால்
அடங்கிச் சாகும்
உங்களை போன்ற
கோழை தான்!

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (2-Sep-17, 5:59 am)
பார்வை : 136

மேலே