லக்‌ஷ்மி துதி

அறுசீர் விருத்தங்கள்

அடர்ந்தொரு கான கத்தில்
. அகப்படும் நேரம், அச்சம்
பொடிந்திடக் காளி என்னும்
. பொலிவுடைக் கரங்கள் தூக்கி
வடிவுற அரசைத் தந்து
. வண்ணமின் நகருக் குள்ளே
குடிபுக வைத்தாள் அம்மா !
. குணவதி மறைந்தாள் அம்மா ! (1)

அம்மவோ அங்கே நானும்
. அமைவுற உன்றன் கீர்த்திச்
செம்மையை அன்றி வேறு
. சேர்க்கையைக் கருத்திற் கொள்ளேன் !
விம்மலும், துயரும், கோப
. வீச்சதும் ஏழைக் கன்றாம்!
தும்மலும் பெரிதாம், செல்வம்
. தோன்றிடப் பெற்றார்க் கங்கே ! (2)

கேண்மையும், அறிவும், ஞானக்
. கேள்வியும், சமவு ணர்வும்,
ஆண்மையும், தெய்வ பக்தி
. ஆழமும், இருந்த போதும்
ஊண்தரும் நின்றன் ஆற்றல்
. உடனிலா ஏழை யோரை
நாணிலார் என்றே வையம்
. நசுக்குதல் கண்டேன் ! அந்தோ ! (3)

தோளிலே வலிமை தாங்கி
. தோன்றிடும் எனக்கும், உண்ண
வேளையில் சோறு, போர்த்த
. வெறுந்துணி, இருக்க வீடு
நாளெலாம் தேவை யாக
. நானிதை எழுது கின்றேன் !0
வேளவன் மாலின் மார்பில்
. வியப்புற நின்ற தேவி ! (4)

தேவியே ! கருணை ஊற்றாம்
. தேசுடைத் திருவே ! நின்றாள்
மேவியே பணிவேன், துன்பம்
. மேலிடக் குணியேன்! என்றன்
ஆவியை வாழ வைத்தே
. அருமுடல் செழிப்பைச் சேர்க்கும்
காவியப் பாவாய் லக்‌ஷ்மி
. கடைவிழி அருளைத் தாராய் ! (5)

ஆய்ந்தென தறிவை நன்றாய்
. அளைந்தபின் னேகி டைத்த
வாய்மையின் வழியாம் நின்னை
. வணங்கிவாழ் கின்ற மார்க்கம் !
தாய்நினக் கடியன் வாழ்க்கைத்
. தன்மைகள் தெரியப் பெற்றால்
பாய்ந்திடும் மகிழ்ச்சி வெள்ளம்
. பாலனை நனைத்தி டாதோ ? (6)

ஓருவாய் நானும் உன்னை
. ஒருபிடி மண்ணா கேட்டேன் ?
பேரெழில் பொன்னா கேட்டேன் ?
. பெருமையாம் மனையா கேட்டேன் ?
சீருடன் என்றன் பக்கம்
. ஸ்ரீதேவி நீயி ருக்கக்
கோரிடும் அன்பன் என்னைக்
. கொஞ்சம்நீ நோக்கல் வேண்டும் ! (7)

வேண்டுவோர்க் கில்லா மையை
. வெருட்டிடும் அன்பு தேவி !
மாண்புடைப் பேறென் றேதான்
. மண்ணெலாம் போற்று கின்ற
காண்புது வொளியே ! ஆழக்
. கவியுளம் துதிக்கும் அன்னாய் !
ஆண்டவர்க் குதவும் கோலே !
. அடியனின் வாழ்வில் நிற்பாய் ! (8)

நின்றொரு பார்வை யாலே
. நிலைபெறச் செய்வாய் ! வாழ்வைக்
குன்றென நிமிர்த்திக் காட்டிக்
. குவலயம் போற்றச் செய்வாய் !
நின்னரும் பெயரைச் சொல்லி
. நிதமொரு பனுவல் பன்னி
என்னிருள் களையக் கேட்பேன்
. எழுந்திடல் திண்ணம் செய்வாய் ! (9)

வாய்மொழிப் புலவர் சொன்ன
. வாக்கெலாம் வாழ்ந்த தேவி !
தாய்மையின் வடிவே ! எம்மைத்
. தளர்விலா திருக்கச் செய்வாய் !
ஓய்கவென் வறுமை ! செல்வம்
. ஓங்குக ! இல்லா மைதான்
சாய்க!நின் நட்பின் ஜோதி
. திகழ்கவென் னோட டர்ந்தே (10)

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 4:12 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 73

மேலே