முதல் காதலின் நினைவு

அந்த தொலைப்பேசி அழைப்புமணி விடியாத இரவின் நிசப்தத்தை சீர்குலைத்திருந்தது.
எதிர்முனையில் பேசிய மௌனத்தின் குரல்,இரவின் நிசப்தத்தை இரவலாக பெற்றிருப்பதை குறித்தது.
திடீரென லேசான விசும்பல் சப்தம் உடைந்து அழ ஆரம்பித்ததும்,
என் உணர்வுகள் இதயத்தை உலுக்கி எடுத்தது.
நெடுவருடங்களுக்கு முன்,
என் கண்முன்னே மரணித்தவளின் கடைசி மன விசும்பலின் சாயல் மீண்டும் கேட்ட போது பதற்றம் அதிகரித்து கொண்டே சென்றது.
என்னை மறந்து விட்டாயோ என்ற ஒற்றை வரி சொல்லுக்கு,
பதில் சொல்ல எத்தனித்த போது தொண்டைக்குள் வார்த்தைகள் வெளியேற சிரமப்பட்டு கொண்டிருந்ததை அறிய முடிந்தது.
மீண்டும் நிசப்தம் உயிர் பெற்று இருவரிடையே உரையாடி கொண்டிருந்தது.
இதோ உன்னை பார்க்க வரேன்மா என்று சொல்லி முடிக்கவும்,
இணைப்பு துண்டிக்க பட்டதை உணர்ந்து கொண்டேன்.
திரும்பி பார்த்தேன்.
நான் அமைதியாய் உறக்கத்தின் எல்லையில் வீழ்ந்து கிடந்தேன்.

முதல் காதல் ஆழ்மனதின் கல்லறையிலிருந்து தூக்கமில்லாமல் வெளியே வந்து உலவியது இதற்காகதானோ..

எழுதியவர் : சையது சேக் (16-Sep-17, 7:59 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 420

மேலே