என் மகன் என் பாவம்

இது யாரோ ஒருவருடைய வாழ்க்கையில் நடந்தது...
படித்தபோது பிடித்தது..!
******************

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் நான் ஊதாரி.
சினிமா, தண்ணி, ஹோட்டலென்று நண்பர்களுடன் ஜாலியான வாழ்க்கை.

கை நிறைய சம்பளம் வாங்கினாலும் 15 நாட்களுக்கு மேல் தாங்காது.

வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)
அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார்.

சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் பணம் வாங்கியிருக்கிறேன் என்றால் கணக்கு பார்த்து கொள்ளுங்கள்.

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சு செய்துஅனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம் "உடம்பை கவனிக்கனும், கெட்ட பழக்கம் (புகை.,மது...) எதுவும் தொடக்கூடாது, பணியில் கவனம் தேவை." என்று சுருக்கமான அட்வைடன் முடியும்.

ஓராண்டை நான் ஓட்டி விட்டேன்..!

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிலிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்..

காரணம் மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிலிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “பாவம்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு பெரும் அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசியில் பேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு? நீ கேட்ட தொகையைதானே அனுப்பி வைத்தேன்” என்றார் ஒருவித பதட்டத்துடன்.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே நான் பேசுவேன்.

"இல்லப்பா எப்பவும் மைடியர் சன் அப்படின்னு கூப்பிட்டிருப்பா.. இப்போ 'மை டியர் சின்' னுணு எழுதியிருக்கப்பா… அதான் திருப்பி அனுப்பிட்டேன்ப்பா"
என்றேன்.

மறுமுனையில் அப்பா சிரித்தார். நான் அவரை மிக நன்றாக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை நான் இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் பணியில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலையைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..?
உனக்கென்ன ராஜா… நீதானடா என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் நானே கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்தியும் மீறி வந்து விட்டது..

"இல்லப்பா.. அவர் சரியாத்தான் டைப் செய்திருந்தார்.. எனது சம்பள விபரத்தையும் மணியாடர் பண விபரத்தையும் சொல்லி "சின்" அப்படி அடித்தது சரிதானேன்னு தோணுச்சப்பா… அதான் திருப்பி அனுப்பினேன்“ என்றேன்.

இந்த முறை அப்பா சிரிக்கவில்லை. என்னை கட்டியணைத்தார்..
அதில் "மன்னிப்பும், கருணையும், என்மீதுள்ள நம்பிக்கை"யும் உணர்ந்தேன்..!

இன்று யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் நல்ல அப்பாக்கள் வரம்...
தவமிருந்தாலும் கிடைக்காத "வரம்"..!

நட்புடன் குமரி

எழுதியவர் : முகநூல் (11-Nov-17, 12:19 am)
Tanglish : en magan en paavam
பார்வை : 565

மேலே