உப்பிட்டாவது உண்ணாதிருப்போம்

உயிர்தேடச் சொல்லி
உமிழ் நீர் வற்ற
உரக்கக் கத்தும்
தென் முனையை
காண இயலாகக் கண்களில்
இடிவழிந்து சொட்டவே !

பெரு ஒட்டு தேடி
திருவோடு ஏந்தும்
கரை வெட்டிக் கசடுகளே
கடுகளவு இதயம்கூடவா
இல்லாமல் போயிற்று ?

வெற்றிடம் நிரப்ப
விரைந்திட்ட காற்று
விரட்டிச் சென்ற உயிர்களின்
உடல் மட்டும் மிதந்தும்
விழாவேடுக்கும் - உம்
விலாவெடுக்க வேண்டாமா ?

மீன் தேடித் போன
மீனவனைத் தேடிப் போக
நாதியில்லை காண்,
தெற்கிருக்கும் வள்ளுவர்
காறித் துப்பினால்
சென்னை விழிக்குமா ?

பரபரப்பு செய்திக்கு
பிணம் தின்னும் கழுகாய்
வலம் வரும் ஊடகமே,
உரக்கக் கத்துங்கள்
உடலாவது கிடைக்கட்டும் !

துக்கத்தில் பங்கு கொள்ள
மறுத்து - வாக்கு கேட்கும்
ஓநாய்கள் ஒரு நாள்
உங்கள் தெருவும் வரும்,
கடிக்க மறுக்காதீர் !

தற்குறிகளின்
தெங்கம்பழமாய்
தமிழ்நாடு ஆனதென்ன ?
இனிவொரு மாற்றம்
செய்வோம் - அன்றி
உப்பிட்டாவது
உண்ணாதிருப்போம் !

உன்னை கண்டவுடன்
துப்பாக்கி எடுக்கும்
காடையனைக் விட...
இக்கட்டில் திரும்பா
முகங்களை குறித்துக்கொள்
குறிபார்த்தும் கொள் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (7-Dec-17, 5:51 pm)
பார்வை : 266

மேலே