நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-05

....நெஞ்சோடு கலந்திடு....
அத்தியாயம் : 05
அன்றும் இதே போல்தான் இதே கடற்கரையில் அமர்ந்திருந்தேன்...அன்று மட்டுமல்ல,என்று அவன் இந்தக் கடற்கரையில் வைத்து அவனது காதலைச் சொன்னானோ...அதிலிருந்து இந்தக் கடலையும் நான் நேசிக்க ஆரம்பித்து விட்டேன்...
அதுவரை காலமும் அலைகளோடு விளையாடுவதில் மட்டுமே கழிந்த என் காலங்கள்,அவன் காதல் துளிகள் அதில் கலந்ததிலிருந்து அவனைப் போலவே இக் கடலும் என் மனதிற்கு நெருக்கமாகிக் கொண்டது...
இக் கடலை என் மனம் அதிகம் தேடுவதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது....அவன் காதலைச் சொல்லி நான் மறுத்த அந்த நொடியிலிருந்து அவன் என் முன்னே பெரிதாக வருவதில்லை...ஆனாலும் நான் அறியாமல் என்னை அவன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தான்...அன்று அவன் சொன்னது போல,என் நிழல் போலே என் பின்னே வந்து கொண்டிருந்தான்...
சில நேரம் அவன் காலடிகள்,சில நேரம் அவனின் பார்வைகள் என்று என்னை அவனது காதலால் தீண்டிக் கொண்டேயிருந்தான் ...ஆனால் மறந்தும் என் முன்னே அவன் வந்ததில்லை...அதனாலேயே என் மனம் அவனை அதிகமாய் தேடத் தொடங்கியது...
அந்த நேரங்களில் எல்லாம் என் மனம் நாடுவது இந்தக் கடற்கரையினைத்தான்....என் இத்தனை கால அவனுக்கான காத்திருப்பில் என்னோடு இணைந்து இக் கடலும் அவனுக்காய் காத்துக் கொண்டிருக்கின்றது...
அவன் என்னிடம் காதல் சொல்லி அன்றோடு முழுதாக இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது...மணலில் அமர்ந்தவாறே கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்...கண்களுக்குள் அவன் மட்டுமே என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்..
திடீரென்று அவனே என் முன் வந்து நிற்பது போன்ற பிரம்மை எனக்குள்...ஆனால் அது என் பிரம்மை இல்லை,அவன் நிஜமாகவே என் முன்னேதான் நிற்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு ஓர் விநாடி கூட அவசியமாகவில்லை...
இந்த இரு மாதங்களாய் என் முன்னே வராமல் என்னைத் தவிக்க விட்டவன்,கைகளிரண்டையும் ஜீன்ஸ் பாக்கட்டில் விட்டவாறு,என் விழிகளை அவனது விழிகளால் ஊடுருவியவன் என் அருகே வந்து அமர்ந்து கொண்டான்...
பல நாட்களாய் என்னை விட்டு விலகியிருந்த அவனின் வாசம்,மீண்டும் என் மூச்சுக்காற்றோடு ஐக்கியமாகிக் கொண்டது...இதுநாள் வரையில் அவனைத் தேடி அலைந்த என் விழிகளும் அவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் அவனிடமே தஞ்சமடைந்து கொண்டன...
"இந்தப் பார்வைக்கொன்னும் குறைச்சலில்லை...."
அவன் என்னிடம் பேசிவிட்டான் என்பதிலேயே என் உள்ளம் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டது....மீண்டும் என் குறும்புத்தனம் என்னிடம் வந்து ஒட்டிக்கொள்ள,
"என்னோட கண்ணு....நான் பார்க்கிறேன்...உனக்கென்னடா....??..."
"இந்தப் பேச்சுக்கும் ஒன்னும் குறைச்சலில்லை...."என்று அவன் முடிக்கும் போதே,அதற்கு பதில் சொல்வதற்காய் வாய் திறந்த என்னை கையைக் காட்டி நிறுத்தியவன்....என் பதிலையும் என்னைப் போல அவனே சொல்லிக் காட்டினான்....
"என்னோட வாய்...நான் பேசுறேன்...உனக்கென்னடா...??..இதைத்தானே இப்போ சொல்லப் போற...??.."
"அதான் தெரியுதில்ல...அப்புறமெதுக்கு இதுக்கு குறைச்சலில்லை அதுக்கு குறைச்சலில்லைன்னு ஏலம் போட்டிட்டு இருக்க..."
"இந்த வாய்தான்டி உன்னை வாழ வைக்குது...நல்லா கண்ணு இரண்டையும் திறந்து பார்க்க வேண்டியது...அப்புறம் காதல்னு வந்து சொன்னா கண்ணைக் கசக்கிக்கிட்டு போக வேண்டியது..."
"நாங்க ஒன்னும் கண்ணைக் கசக்கிக்கிட்டு போகல..."
"அது சரி...நீ மத்தவங்க மனசைத்தானே கலங்கடிச்சிட்டு போன..."
அவன் என்னமோ விளையாட்டாகத்தான் என்னோடு வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்...ஆனாலும் அவன் இறுதியாகச் சொன்னதில் இருந்த உண்மையில் என் கண்கள் கண்ணீர்த்துளிகளைச் சிந்தத் தொடங்கிவிட்டன...
"இப்போ எதுக்குடி அழுகுற...??..."
"நான் ஏன் அழுகுறேன்னு உனக்குத் தெரியாது பாரு...??..."
நான் கேட்ட கேள்வியில் என்னைக் கூர்மையாக நோக்கியவன்,எழுந்து எனக்கு முதுகு காட்டியவாறு திரும்பி நின்று கொண்டான்....தலையைக் கோதிவிட்டவாறே என்னைத் திரும்பிப் பார்த்தவன்,
"உன்னோட இந்த அழுகைக்கான காரணம் எனக்கு நல்லாவே புரியுது நித்தியா....ஆனால் நீ ஏன் புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்காய்னுதான் என்னால புரிஞ்சுக்கவே முடியல..."
"இப்போ கூட நீ அழுகிறத பார்க்கும் போது உள்ளுக்குள்ள ஏதோ ஒரு மாதிரி சந்தோசமாத்தான்டி இருக்கு...ஏன்னா இந்த அழுகை கூட நீ என் மேல வச்சிருக்கிற காதல் நித்தியா....ஆனால் அதை ஏன் நீ ஏத்துக்க மறுக்கிறன்னுதான் புரியவேயில்லை...."
"இந்த இரண்டு மாசமா உன்னோட தவிப்பை நான் பார்த்திட்டு தான் இருந்தேன் நித்தியா....உன்னோட கண்கள் என்னைக் காதலோட தேடினதையும் பார்த்தேன்....இது போதும் நித்தியா எனக்கு....இது போதும்..."
"இந்தத் திருப்தியோடயே நான் உன்னைவிட்டு விலகிப் போறன் நித்தியா..."
"என்ன அப்படிப் பார்க்கிற...இது தற்காலிகப் பிரிவுதான் நித்தியா...ஆனாலும் என்னோட காதல் என்னைக்குமே உன்னைத் தொடர்ந்துகிட்டேதான் இருக்கும்..."
"...எனக்கு வெளியூர்ப் பல்கலைக்கழகத்தில தான் பொறியியல் படிப்புக்கான அனுமதி கிடைச்சிருக்கு...நான் நாளைக்கே கிளம்பியாகனும்...நம்மளோட இந்தப் பிரிவு நம்ம காதலை இன்னும் அதிகமாக்கும்...நீ உன்னோட காதலை என்கிட்ட சொல்லப் போற அந்த ஒரு விநாடிக்காக நான் காத்திட்டு இருப்பேன் நித்தியா..."
அவன் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்....ஆனால் அவனுக்குத் தெரியவில்லை,சென்றது அவன் மட்டுமல்ல....என் உள்ளமும் தானென்று....
நினைவுச்சாரல்கள் வீசும்......