பாரதி போற்றி ஆயிரம் – 12
பாடல்கள் 83 முதல் 87
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
பாடல்கள் 83 முதல் 87
பாரதிக்கு வெற்றி மாலை
சுப்ரமண்ய பாரதிக்கு வெற்றிமாலை சூட்டுவோம்
சொன்னவாக்குப் பின்னமின்றிச் சொந்தஆட்சி நாட்டினோம்
இப்ரபஞ்ச மக்கள்யாரும் இனியவாழ்த்துக் கூறவே
இன்றுநந்தம் பரததேவி ஏற்றபீடம் ஏறினாள்.
சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்
சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி
சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.
ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை
அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்
பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?
அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்
அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்
கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.
அமைதிமிக்க தமிழ்மொழிக்கிங் காற்றல்கூட்ட நாடினான்
அறிவுமிக்க தமிழர்தங்கள் அச்சம்போக்கப் பாடினான்
சமதைகண்டு மனிதருக்குள் ஜாதித்தாழ்வை ஏசினான்
சமயபேதம் இல்லையென்ற சத்தியத்தைப் பேசினான்.
நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
****
Share this: