பகுத்தறிவுப் பொங்கல்

உலகத்துக்குச் சோறிடும்
ஒட்டுமொத்த உழவர்களுக்கும்
கால்நடைச் செல்வங்களுக்கும்
நன்றி சொல்லும் தமிழன் நாள்
பொங்கல் திருநாள்...

உண்ண உணவும்
உடுத்த உடையும்
ஊருக்குக் கொடுக்கும்
விவசாயி தன்னைத்தானும்
அவனைப் பிறரும்
போற்றும் பொன்னாள் இது..

பூமிக்கும் பூமிவாழ்
உயிரினங்களுக்கும்
சக்தி வழங்கும் சூரியனைக்
காய்கனி கரும்பு
கிழங்கு வகைகளை
விளக்கின் முன்வைத்து
பச்சரிப் பொங்கல்
சமைத்துக் கொண்டாடும் சூரியத்திருநாள் இது...

தன்னை... தன் வீட்டை
அழகுபடுத்தி தன்
ஊரையே அழகுபடுத்தும்
அற்புத நாள் இது...

பொங்கல் நாள் கொண்டாட்டம்
அது தமிழர்கள் அனைவரும்
ஒன்று சேர்ந்து
தமக்கும் பிறருக்கும்
வருடா வருடம்
எழுதிக்கொள்ளும்
கலாச்சாரக் கவிதை...

உலக ஒற்றுமைக்கு
தமிழன் பங்களிப்பின்
அடையாளச் சின்னம்...
அது கடந்தகாலப் பண்பாடு
நம்மைவிட்டு என்றும்
கடந்து போய்விடாத
அந்தந்த காலத்தின்
நிகழ்கால ஏற்பாடு...

எதிர்காலம் தன் வேர்களை
என்றும் கொண்டாடச்செய்யும்
நிரந்தர நிகழ்ச்சி நிரல்...
தமிழ்வளர்த்த முன்னோர்கள்
விட்டுச் சென்ற
பண்பாட்டு சாசனம்...

கடமைக்கு என்றில்லாமல்
கடமையைச் செய்து
கடமையைப் பாராட்டும்
காரணம் தெரிந்து
கொண்டாடும் பகுத்தறிவுப் பெருநாள்...

தன்னலத்தில் பொதுநலம்
பார்த்து வாழ்வதில்
நாடெல்லாம் நலம் பெறட்டும்..
வளம் பெறட்டும்...
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறைகள்...

வெற்றிலை பாக்கு
தேங்காய் பழம்
சந்தனம் குங்குமம்
பத்தி கற்பூரம் ஆகியவற்றின்
மனம்கவர் மணத்தில்
மனம் லயித்து இறைவனைத்
துதிக்கும் உற்சாக நாளிதில்
எல்லோருக்கும் என் இனிய
பொங்கல் வாழ்த்துக்கள்...

அன்புடன் ஆர்.சுந்தரராஜன்.
😀🙋🏻‍♂👍🙏🌷🌹🌺🚶🏻🕺🏼

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (14-Jan-18, 4:49 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 83

மேலே