சாதித்துக் காட்டிடுவோம்

களைப்பின் மிகுதியால்
உறங்கிடும் பகுத்தறிவை
சீண்டித்தான் பார்க்கிறது
தூண்டிவிடும் இனவெறி !

இடைவேளை நேரமே
இனிய தருணமென்று
நுழைந்திட நினைக்குது
நுண்ணறிவு மேதையென !

பரோபகாரம் செய்வதாக
பகல்வேடம் தரித்திட்டு
பாதையில் திரிபவர்கள்
பாதகங்கள் புரிகின்றனர் !

யாளியின் முகங்கொண்ட
யாழ்முனி அடிமைகளை
யாரென்று அறிந்தவர்கள்
​யாப்பறிந்த தமிழர்கள் !

அடக்கியாள நினைத்து
துடிக்குது ஒருகூட்டம்
பிரித்தாள முனையுது
​பிரிந்திங்கு நிற்பதால் !

துணிவுள்ள உள்ளத்தால்
தும்பிக்கை பலத்தையும்
தூக்கியும் எறிந்திடலாம்
தூங்காதே தமிழினமே !

தமிழால் ஒன்றிடுவோம்
உணர்வால் வென்றிடுவோம் !
காலத்தின் கட்டாயமென
சாதித்துக் காட்டிடுவோம் !

( யாழ்முனி = நாரதர் )


​பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (27-Jan-18, 3:53 pm)
பார்வை : 643

மேலே