மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 22

மூர்ச்சையற்ற பொழுதுகள்-௨௨

மாலதி அவளின் வீட்டிற்குள் சென்றதும்,கார்த்திக் தன்னுடைய வீட்டிற்கு நடக்க தொடங்கினான்..
நேரம் சரியாக இரவு எட்டை தாண்டி இருந்தது...
நேற்று சலீம் தன்னை டியூஷன் வர சொன்னது நினைவுக்கு வந்தது ..இப்போது நேரமாகி விட்டதால் நாளைக்கு செல்லலாம் என நினைத்தவாறு வீட்டிற்குள் சென்றான்...

ஏன்டா லேட்டா வர என்னைக்கும் இல்லாத திருநாளா என சொல்லியவாறு கார்த்திக்கின் அம்மா தட்டில் சோறு கொண்டு வந்து வைத்தார்கள்...
அம்மா அண்ணா ஏன் லேட்டா ஆஹ் வந்துச்சுனு எனக்கு தெரியுமே என்றாள் சுபா..
பிகரை கரெக்ட் பண்ணிட்டு வந்துருக்கும் என கேலியாக சொன்னாள்..
கார்த்திக்குக்கு ஒரு நிமிடம் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை ..
என்னடா பிகர் அத கரெக்ட் பண்ண ஏன் இவ்ளோ நேரம்,காலைல பண்ணிருக்கலாம்ல என கார்த்திக்கின் அம்மாவும் சொல்ல ,இருவர்க்கும் சிரிப்பு வந்தது..
இல்லமா சாட்ல படம் வரைஞ்சு சப்மிட் பண்ணனும் இன்னைக்குத்தான் கடைசி நாள் அதான் அதைலாம் கரெக்ட் பண்ணி கொடுத்துட்டு வர லேட்டா ஆகிருச்சு என கார்த்திக் சொல்லி மழுப்பி கொண்டே எழுந்தான்..
ஆமாம்மா ஒரே படத்தை ஒரு வருசமா கரெக்ட் பண்ணுறான்..இன்னும் முடிஞ்சா மாதிரி இல்ல என சொல்லிவிட்டு சுபா உள்ளே ஓடினாள்..
என்னமோ ரெண்டு பேரும் என்னதான் படிக்கிறிங்களோ,ஒழுங்கா படிச்சு பாஸு ஆனா சரி என்று சொல்லி விட்டு சமயலைக்குள் சென்றார் கார்த்திக்கின் அம்மா..

மறுநாள் இரவு சலீமுடன் சேர்ந்து கார்த்திக்கும் டியூஷன் சென்றான்..
உள்ளே சென்று வாத்தியாரிடம் தன்னை அறிமுக படுத்தி விட்டு உட்கார்ந்து இருந்தான் ..
10th , 12th க்கு தனி தனியாக இரு பிரிவாக பிரிக்க பட்டிருந்தது...
சற்று நேரத்தில் குட் ஈவினிங் சார் என குரல் கொடுத்தவாறு ஜெனிபரும்,பர்ஹானாவும் உள்ளே வந்தனர் ..
சலீம் பர்ஹானாவை பார்த்து ஹை என்று மெதுவாய் கை உயர்த்தினான்..
அவளும் சலீமை பார்த்து சிரித்து விட்டு,அவனை கடந்து செல்லும் போது கையில் வைத்திருந்த சொக்லேட்டை மடியில் போட்டு விட்டு சென்றாள்...
டேய் என்னடா இது எப்போ ,என கார்த்திக் திகைத்தான்..
அதுவா 11th லீவு கேப் ல நடந்துச்சு ...அவதான் லவ் ப்ரொபோஸ் பண்ணுனா...
நான் உன்னிடம் சொல்லணும்னு நினைச்சேன்..இப்போதான் கொஞ்சம் பேசுற அளவுக்கு பழகுறோம் அதான் இப்போ சொன்னேன்..
வேற பேசுறதுக்கு இடமும் அமைய மட்டேன்கு ..நீயும் என பக்கத்துல இருந்த எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் அதான் உன்னை டியூஷன் வர சொன்னேன் என்றான் சலீம்...

வாழ்த்துக்கள் மச்சி ..உன்னிடம் ஒன்னு சொல்லணும் என இழுத்தான் கார்த்திக்..
என்னடா மச்சான் சொல்லு ..
பர்ஹானா ஏற்கனவே என்னிடம் உன்னை லவ் பண்ணுறேன் னு சொல்லிருஞ்சு ...பட் அந்த டைம் ல உன்னிடம் இத பற்றி பேச முடியல ...
தெரியும் டா அவ சொன்னா..உன் லவ் செட் ஆனா பின்னாடி உன்னிடம் சொல்லலாம்னு நினைச்சேன் ..நீயே பார்த்து கேட்குறதுக்கு முன்னாடி சொல்லணும் னு தோணுச்சு என்றான் சலீம்...
டியூஷன் முடிந்து விடை பெற்று கொண்டான் கார்த்திக்....


அவள் காலமெல்லாம் என்னுடன் வருவாள் என்று மனசு மூடத்தனத்தை முழுவதுமாய் குத்தகைக்கு எடுத்திருந்தது.
அதீத எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தின் முதல் படி என்பதை தாமதமாய் கற்று கொண்டான் கார்த்திக்..
பதிவாய் செல்லும் பேருந்தில் அவன் மட்டும் பயணிகளோடு தனித்து பயணித்தான் அன்று...அவள் காலமெல்லாம் தன்னுடன் வருவாள் என்று மனசின் மூலையில் மூடத்தனம் முழுவதுமாய் முக்காலி போட்டு அமர்ந்திருந்தது..
அவள் வராத பேருந்து அவனை கிடத்தி கொண்டு கடையநல்லூர் பஸ் ஸ்டாண்டில் வீசிவிட்டு சென்று இருந்தது...
பேருந்தின் நிறுத்தத்தில் எதோச்சையாக நிற்பது போல் காட்டி கொள்வது எவ்வளவு கடினம் என்பதை,எதிரில் பள்ளிக்கு வரும் நண்பர்களின் ஆயிரத்தெட்டு விசாரிப்புகள் அநியாயத்திற்க்கு நியாயமாய் பட்டதால் அவ்விடத்தை விட்டு இடம் பெயர்ந்து
வேறு இடத்தை தேர்வு செய்து நிற்கலாம் என்றால் கேள்விகள் வேள்வியில் ஊற்றப்பட்ட எண்ணெய் போல் எரியும் என்பதால் அவளை பாராமலே வகுப்பறைக்கு வந்து சோகத்துடன் சுவரினை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக்..

நேரம் காலம் தெரியாது அமர்ந்திருந்த வேளையில் காசிதர்மத்தில் அவள் பயணித்த பேருந்து பஞ்சராகி விட்டதால் நடந்தே அவளின் தோழிகளுடன் பள்ளிக்கு வந்து விட்டாள் என்று கேள்வி பட்டு,
அவள் பாதம் வலித்திருக்குமே என்றென்னி அவன் மனம் வலியால் துடித்த தருணம்..
அப்போதுதான் அவள் பயணித்த பேருந்தில் அவளை போலவே பள்ளிக்கு நடந்த களைப்போடு உள்ளே நுழைந்த சரவணன்,
கார்த்திக் அருகில் வந்து "காசிதர்மத்தில் மாணவி கற்பழிப்பு" என்று எதோச்சையாய் சொல்ல..
கார்த்திக் காதில் மாணவி என்ற இடத்தில் மாலதி என்று கேட்டு தொலைந்து விட்டது..
அவனை அறியாமல் சரவணன் கன்னத்தில் பாளார் என அடித்து விட்டான் ..
கன்னம் வீங்க,
கண்கள் நீர் சுரக்க,
வார்த்தைகள் வயோதிகமாகி
வகுப்பின் ஓரத்தில் கூனி குறுகி நின்றான் சரவணன்..
அருகில் நின்ற அனைவரும் வகுப்பில் கூடி விட்டனர்..
அவன் சொன்ன வார்த்தைகள் கார்த்திக்குள் இன்னும் மனப்பிராந்தியால் மறுபடி மறுபடி ஒலித்து கொண்டிருந்தது..
நேரம் நெகிழ்ச்சி அடைந்திருந்தது..
கூட நின்ற நண்பர்கள் சரவணன் நீ நினைத்த மாதிரி சொல்லவில்லை,உனக்கு எதோ தப்பா கேட்டுருச்சு,அவனை பாரு அழுத்த்துக்கிட்டு நிக்கிறான் என கார்த்திக்கிடம் சொல்லவும். கார்த்திக்குக்கு முன் அருகில் வந்து சரவணன் மன்னிப்பு கேட்டான்..
அவனுக்கும் புரிந்து இருந்தது கார்த்திக் தவறாய் புரிந்து கொண்டது..
இல்லை நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் மன்னிச்சுரு என சரவணன் கைகளை பிடித்து
பதிலுக்கு மன்னிப்பு கேட்டான் கார்த்திக்..

ஆத்திரத்தில் புரிந்து கொள்ளாமல் அன்று சரவணனை கன்னத்தில் அடித்த அடி,காலம் கார்த்திக்குக்கு வட்டியும் முதலுமாய் திருப்பி கொடுக்க போறதை அவன் அறிந்திருக்க வில்லை..அதுவும் எந்த பெயருக்காக அவன் அடித்தானோ அதே பெயருக்காக அடி வாங்குவான் என்று...அந்த நாள் தன்னுடைய நிழல் போலவே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது..

காலையில் அவளை பார்க்க முடியாததால் மாலையில் அவளை பார்க்கும் ஆவலில் நின்று கொண்டிருந்தான் கார்த்திக்..
அவளை பார்க்கவே முடியவில்லை.
அந்த அளவிற்க்கு கூட்டம் அவன் கண்களிலிருந்து அவளை மறைத்திருந்தது.
நேரம் வேகமாக சென்றது,கூட்டம் மெதுவாய் கலைந்தது.
பேருந்து பக்கத்து ஊரின் அருகில் நின்றது.
அவள் இல்லையென்று நினைத்து இறங்கி கார்த்திக் மட்டும் சாலையில் நின்றான் ..
ஜன்னல் வழியாய் அவனுக்கு பழக்கப்பட்ட ஒரு ஜோடி விழிகள் வெகுநேரமாய் பார்பதை உணர்ந்தான்..
அவளின் ஒன்றை பார்வையில் மீண்டும் உயிர் பெற்று ஓடி சென்று பேருந்தில் ஏறினான்..

சரவணன் பக்கத்தில் போய் நின்றான்..அவனருகே இருந்த சீட்டில் மாலதி ஜெனிபர் இருவரும் அமர்ந்திருந்தனர்..
கார்த்திக் அவனிடம் பேசி சிரித்து கொண்டே வந்தான்.
அதற்கேற்றவாறு அவளின் புறத்திலிருந்து சிரிப்பு ரிங்டோன்கள் வெரைட்டியாய் இசைத்து கொண்டிருந்தது..
நெற்றியில் சின்ன ஸ்டிக்கர் பொட்டை,திருஷ்டி பொட்டை விட மிகச்சிறியதாய் வைத்திருந்தாள்.
கார்த்திக்கின் பெருமூச்சின் தழுவல்களை அவள் உணர்ந்திருந்தாள்.
ஓரக்கண்ணால் பார்த்தாள்.
அந்த கருவிழியின் காந்த அலைகாற்றின் அகடு முகடுகளில் சிக்கி அவனது இதய துரும்புகள் எங்கேயோ தூக்கி எறியப்பட்டு இருந்தது..
பேருந்து முழுவதுமாய் அவர்களை கரை சேர்க்கும் வரை,
அவளின் கண்கள் திரும்பி திரும்பி பார்த்தே களைப்படைந்து போயிருந்தது.

அவளை பார்த்த போது ஓராயிரம் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பிரகாசித்தது போல மாறி போயிருந்தாள்.
சந்தோஷத்தின் சிதறல்களை அகத்தில் மட்டுமில்லாமல் புறத்தோற்றத்திலும் தெறிக்க விட்டிருந்தாள்.
மெலிதாய் முடியை ஓரமாய் இழுத்து தனித்து விட்டிருந்த அழகை பார்க்க அவனுக்கு மட்டுமே வரம் கிடைத்திருந்தது.
கிரானைட் விழுதுகளால் கோர்க்பட்ட கேசத்தில் அவனை முழுவதுமாய் கட்டுண்டு கிடத்தினாள்..
நெற்றியின் மேலேறிய வகுடுகளின் ஒற்றையடி பாதையின் இரு புறத்திலும் ,அழகான சிகப்பு ரோஜாக்களை ஆயுதம் ஏந்திய ராணுவத்தை போல நிப்பாட்டி இருந்தாள்..
பின்னலிட்ட ஜடைகள் இரண்டும் ஜாடையாய் கார்த்திக்கை பார்த்து கண்ணடித்து ...
அதற்காகவே காத்திருந்த இதயம் இடம் மாறி எகிறி குதித்து அவளின் நெருக்கத்தில் நீண்ட நேரம் கண்களால் சரணாகதி ஆக்கப்பட்ருந்தது...

பயணங்களின் நீட்சியில் காதல் மீட்சியடைந்ததா அல்லது வீழ்ச்சி அடைந்ததா என அடுத்தடுத்து பார்ப்போம் .....

தொடரும்...

எழுதியவர் : சையது சேக் (26-Feb-18, 6:20 pm)
பார்வை : 300

மேலே