நட்பு

நட்பு என்றால் என்ன? திடீரென்று எப்படி எதிரியாக நினைக்க முடியாதோ, அதுபோல் நட்பையும் கொள்ள முடியாது. நல்ல சம்பவங்கள் நட்பை உருவாக்கும். கெட்ட சம்பவங்கள் நட்பை பகையாக்கும். வரலாற்று பக்கங்கள் எல்லாம் நட்பின் சுவடுகள் இன்னும் அழியாமல்தான் இருக்கின்றன. கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு, அதியமான் - அவ்வையார் நட்பு, கண்ணன் - குசேலன் நட்பு, துரியோதனன் - கர்ணன் நட்பு இவையெல்லாம் நட்பின் கோபுரங்கள். நட்பு என்பது சுயநலமில்லாமல் பிறருக்காக உருகும் மெழுகாய் இருக்க வேண்டும். தன்னை கசக்கி பிழிந்து கொண்டு, சக்கையாக மாற்றி கொண்டு, பிறருக்கு சுவை தரும் கரும்பாய் இருக்க வேண்டும். விழி நீர் துடைக்கும் விரலாய் இருக்க வேண்டும். பணத்தை கடனாய் கொடுத்து வாங்குவது நட்பல்ல. குணத்தை நன்றி கடனாய் காட்டுவதே நட்பு. பிரச்சினை வரும் போது விரல்களை போல் விலகி இருக்காமல், உதடுகளை போல் ஒட்டி இருப்பது நட்பு. என்னை பொறுத்தமட்டில் நட்பு என்பது அன்பினால் உருவான ஏணி. காந்தி அஹிம்சையோடு நட்பு கொண்டதால் சுதந்திரம் கண்டார். கொலம்பஸ் முயற்சியோடு நட்பு கொண்டதால் அமெரிக்காவை கண்டுபிடித்தார். என்னுடைய கல்லூரி காலத்தில் நட்பே என்னை உயர்ந்த நிலைக்கு மாற்றியது. ஒரு சின்ன குக்கிராமத்தில் இருந்து மதுரை செந்தமிழ் கல்லூரிக்கு படிக்க போன நான் முதலில் புத்தகங்களோடு நட்பு கொண்டேன். அது எனக்கு பல நண்பர்களை உருவாக்கி தந்தது. பல மேதைகளை அறிமுகப்படுத்தியது.

எனது உளறலை, எனது கிறுக்கலை, கவிதையை ஆக்கலாம் என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தியது எனது அருமை நண்பர்கள் மு.முத்துராமலிங்கம் (அ.புதுப்பட்டி), ஆ.கென்னடி (அ.புதுப்பட்டி), தா.முனியாண்டி (அவனியாபுரம்), ரவி (ராஜகம்பீரம்), திருமாறன் (மதுரை), அழகர்சாமி (மதுரை) இவர்கள் எல்லாம் என்னை உற்சாகப்படுத்திய உயிரான நண்பர்கள். தமிழ் இலக்கியம் படிக்கும் போது வகுப்பறையில் ஒரு தலைப்பை கொடுத்து கவிதை எழுத சொல்லி உடனே அதை விமர்சனம் செய்து பாராட்டி, என்னை செந்தமிழ் கல்லூரியின் ஆஸ்தான கவிஞன் என்று அழைத்து கவுரவப்படுத்திய மறைந்த பேராசிரியர் திரு.உலகநாதன் ஐயா அவர்கள் என் கவிதை பயணத்தின் வழிகாட்டி. கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பேச்சுபோட்டி, கவிதை போட்டி, நாடக போட்டி, இவைகளிலெல்லாம் என்னால் கண்டிப்பாக முதலிடத்தை பெற்று தந்து பெருமைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு என்னை போட்டிகளுக்கு அனுப்பி வாய்த்த மதிப்பிற்குரிய நிர்மலா மோகன் அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பேராசிரியை. 1989ம் ஆண்டு எனது கவிதை ஒரு மாத இதழில் வெளிவந்தது. அப்பொழுது செந்தமிழ் கல்லூரியில் முதல்வராக இருந்த மறைந்த திரு.கு.துரைராஜ் அவர்கள் ஒவ்வொரு வகுப்பாய் போய் அந்த படைப்பை காட்டி சந்தோசப்பட்டது என் மனதில் கல்வெட்டாய் நிற்கிறது. எம்.ஏ.தமிழ் இலக்கியம் முடித்தபோது அந்த கல்லூரியில் சிறந்த மாணவனாக தேர்ந்தெடுத்ததை இன்னும் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். செந்தமிழ் கல்லூரி என் தவறுகளை திருத்தியது. என்னை கவிஞனாக்கியது, மனிதனாக்கியது. இன்னும் செந்தமிழ் கல்லூரியோடு என் நட்பு தொடர்கிறது. என்னை பேச்சாளராக, கட்டுரையாளராக என்னை மாற்றியது M.S.உதயமூர்த்தி அவர்கள். அதிகப்படியான தன்னம்பிக்கை நூல்களையும், மனஇயல் நூல்களையும், ஒழுக்கநெறி நூல்களையும் எழுதியுள்ளார். 1996ல் இவரை சந்தித்தப் பின் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் ஆன்மீக நெறி, ஒழுக்க நெறி ஆகும். இவருடைய நூல்கள் நான் நட்பு கொண்டதால் நான் நல்ல ஒரு பேச்சளானாக மாறிவிட்டேன். துரோகம் துரத்திய போதும், வஞ்சகம் வாளால் வெட்டியபோதும், என்னை அமைதிபடுத்தி பக்குவப்படுத்தியது நான் நட்பு கொண்ட இவரது நூல்களே. எல்லோரும் நட்பு கொள்ளுங்கள் தாயின் அன்போடு, தந்தையின் அறிவோடு, தாரத்தின் கொள்கையோடு, நண்பர்களின் மனதோடு, ஆசிரியர்களின் போதனையோடு. ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசித்து நட்பு கொள்ளுங்கள், நட்பு கொண்டபின் ஏன் நட்பு கொண்டோம் என்று யோசிக்காத வண்ணம் நட்பை தொடருங்கள்.

எழுதியவர் : (23-Mar-18, 11:39 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : natpu
பார்வை : 9182

மேலே