பாரதிதாசன் 1

பாரதிதாசன்
உன் பாட்டன் பாவேந்தன்
உன் அப்பா கோ வேந்தன்
உன் அண்ணன் பூ வேந்தன்
நீயோ மூன்றும் ஒருசேரப் பெற்ற மூவேந்தன்
பாவேந்தன் படைத்தது
பாண்டியன் பரிசு
அவன் கிடைத்தது
பாண்டிச்சேரிக்குப் பரிசு
தமிழ் கண்ட சொக்கலை விக்கலை
நக்கலை சிக்கலை முட்களை
கலைந்தது இவன் இயல் இசை நாடக முக்கலை
பாரதிதாசனாக மண்ணில் பிறந்தாய்
பார் அறி நேசனாக விண்ணில் பறந்தாய்
பாரதி, பெரியார், அண்ணா
என மும்முகம்
கொண்டது உன்அகம்
கவிதை , கதை , அரசியல்
எனப் பன்முகம்
கொண்டது உன்முகம்
இந்தத் தமிழ்க் ( க )விதை
விதைக்கப்பட்டது 1891 சித்திரையில்
புதைக்கப்பட்டது 1964 சித்திரையில்
அது முத்திரையானதும்
நித்திரையானதும் சித்திரையில்
அவரைத் தழுவிய மரணம்
அரண்டு கண்டது ஆற்றமுடியா ரணம்
அவர் தமிழை தழுவ நினைத்தபோது
இந்தக் கவிதை முத்துரத்தினத்தின்
இயற்பெயர்தான் கனக சுப்புரத்தினம்
உன் தமிழ்ச் சொல்வீட்டிற்குள்
அமரமுடியாத நான்
மகிழ்ச்சி கொண்டேன்
உன் கல்வீட்டிற்குள்
அமர்ந்தபோது ..
எட்டாதூரத்தில் கவிஞர்களுக்கெல்லாம் கோ பாரதி
கைக்கெட்டும் தூரத்தில் இங்கே கோ பாரதி
நீ பேனாவில் மை ஊற்றி எழுதவில்லை
பொய் ஊற்றி எழுதவில்லை
நெய் ஊற்றி எழுதினாயோ ?
இன்னும் மணக்க வாழ்கிறது
உன் எழுத்து
புரட்சிக்கவியே
உன்னை நினைக்கத் தாழ்கிறது
என் கழுத்து ...