மஞ்சள் ரோஜா
மாலைப் பொழுது
மயக்கம் தர...
மஞ்சள் ரோஜா
மலர்ந்த படி இருக்க...
மகரந்த மணம்
சூழ்ந்திருக்க....
மனைவியும் பக்கம்
அமர்ந்த படி...
மலரும் நினைவுகளை
பகிர்ந்திருக்க...
மழலை ஒன்று
மடி மேலே...
மந்தகாசப் புன்னகை
பூத்திருக்க...
மனது முழுவதும்
மகிழ்ச்சி வெள்ளம்
மாறாது எங்கும்
நிறைந்திருக்க...
எத்தனை அழகான
இன்ப வாழ்வை...
இறைவன் அளித்துள்ளான்...
என்றே என் மனம்
இறுமாந்திருக்க...
இடையிலே ஒரு குரல்
" ஏழு மணிக்கு
இரவு உணவு...
எழுந்து வாருங்கள்"
என உரைக்க...
எண்ண அலைகள்
எங்கோ மறைய....
எழுந்து...
தடி ஊன்றி...
தாங்கிப் பிடிக்க
யாருமின்றி...
தன்னந் தனியனாய்...
திரும்பி ... உள் நடந்தேன்...
இப்போது...என்
இல்லமாகி விட்ட
இந்த முதியோர்..இல்லத்துள்.
🌷இன்னிலா🌷