343 அறிவுக் குறைவால் நல்லோர் அல்லோர் போல் தோன்றுவர் - பிழை பொறுத்தல் 8
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
வெருட்சியுளோர்க் கெங்கணும்பேய் உருத்தோன்றும் எழின்முகத்தை
..விகற்ப மாக்கித்
தெருட்சியில்கண் ணாடிகாட்டும் அவைபோல்தீ தியற்றாருந்
..தீயர் போலப்
பொருட்சிதைவால் தோன்றுவர்தீ தெனவறமும் தோன்றுமவர்
..புரிபி ழைக்கு
மருட்சியில்பல் காரணங்க ளுளவாமென் றுனிப்பொறுப்பர்
..மாண்பி னாரே. 8
- பிழை பொறுத்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மனக்கலக்கம் உடையவர்களுக்கு எல்லா இடங்களிலும் பேயுருவே தோன்றும்.
தெளிவில்லாத கண்ணாடி அழகிய முகத்தையும் அழகிற் குறைந்து வேறுபடக் காட்டும்.
அது போல, தீமைசெய்யாதவரும் தீயர் போல் நமது அறிவுத் தெளிவின்மையால் காணப்படுவர். நற்செயல்களும் தீமை போல் காணப்படும்.
மயக்கத்தால் அவர் செய்யும் தீமைகளுக்கு பல காரணங்களுண்டு என்று எண்ணி அவர்களது பிழையைப் பண்புடைய பெரியோர் பொறுப்பார்கள்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
வெருட்சி - மனக்கலக்கம். விகற்பம் - வேறுபாடு. தெருட்சி - தெளிவு. பொருள் - அறிவு.
அறம் – நற்செயல், மருட்சி - மயக்கம்.
மாண்பினர் - பெரியோர்.