காமம் செப்பாது கண்டது மொழிமோ-------இலக்கிய விவாதம் ---படித்தது ---நம் பார்வைக்கு

சுந்தர ராமசாமி பற்றிச் சொல்கிற போது ஜெமோ சொல்லுவார், எவரையாவது இலக்கிய விவாதங்களில் இருந்து கழட்டி விட எண்ணினால் சுரா அவருடைய பேர்சனல் விசயங்களை கேட்க ஆரம்பித்து விடுவாராம். அப்போது சுராவின் உடல்மொழியும் மாறிவிடும் என்கிறார் ஜெமோ.

முன்னர் எல்லாம் முகநூலில் தீவிரமாக விவாதங்களில் கலந்துகொள்வேன். மடித்துக்கட்டிக்கொண்டு இறங்கினால் இரண்டில் ஒன்று பார்த்துவிட்டுத்தான் மறுவேலை. தீவிரமான விவாதங்களின் போது, மிக கொடுமையான வன்முறையாளர்கள் இந்த மாதிரியான முகநூல் விவாதங்களில் இருந்துதான் தோன்றுவார்களோ என எண்ணியதும் உண்டு. மனிதனுடைய சுயத்தை தீண்டுகிற போது அவன் தன்னிலை மறந்தவனாகிவிடுகிறான். இவர்களுக்கு முன்னால் தோற்றுவிடவே கூடாது என்பதைப் போல தான் சொல்வதைச் சரி என நிறவ மூர்க்கமாக களமாடுகிறான். நிறைய மனச்சிக்கலை உருவாக்கக்கூடிய விசயம் அது. நானும் அப்படியான ஒரு கட்டத்தை அனுபவித்திருக்கிறேன். இப்படியான விவாதங்கள் சல்லிக்காசு பெறாது எனத் தெரிந்திருந்தும், சரி, அது நமது இயல்பு என இருந்துவிட்டேன்.

பின்னர் ஒருநாளில் Camus யின் the stranger வசிக்கிற போது அதில் ஒரு இடத்தில் Camus இப்படி எழுதுகிறார்;

As I usually do when I want to get rid of someone whose conversation bores me, I pretended to agree.

Camus அதை தன்வாழ்வில் எவ்வளவு தீவிரமாக கடைப்பிடித்தார் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அந்த விடயத்தை எனக்கான ஒரு போதனையைப் போல எடுத்துக்கொண்டேன்.

முகநூல் விவாதங்கள் ஒரு போதும் ஒரு முடிவை நோக்கி நகர்வதில்லை. தன் மேன்மையைப் பறைசாற்ற, அல்லது எதிரியை கீழ்மைப்படுத்தவே பல விவாதங்களும் நிகழும் ஒரு தளமாக முகநூல் மாறி ஆண்டுகள் பலவாயிற்று. ஆரோக்கியமான உரையாடல்கள் ஒருபுறம் நிகழ்ந்தாலுமே, வீணான விவாதங்களே முன்னிலைப்படுத்தப்படுவதாக தோன்றுவது எனக்கு மட்டுமேவா என்பதும் தெரியவில்லை.
எது எப்படியோ, இப்போதெல்லாம் வீணான விவாதங்களை தவிர்த்துக் கொள்ளும் முறையை தெரிந்துகொண்டேன்.

‘நீங்கள் சொல்வது சரிதான் தோழர். இன்னும் ஊண்டிச் சொல்லுங்கோ’ என அவர்களைக் கடுப்பேற்றுவது அவ்வளவு அலாதியானது. புறக்கணிப்பை விட வஞ்சகப் புகழ்ச்சியும் அதன் தொடர்ச்சியான போலியான ‘ஏற்றுக்கொள்ளலும்’ கொடுமையானது. அதன் மூலம் எதிரி கடுப்படைகிறான் எனத் தெரிந்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது.

இதை எழுதுகிற போது ‘எவ்வளவு வக்கிரமானது இந்த மனது’ எனத் தோன்றுகிறது. வக்கிரமான மனதில்லாத எவரும் உண்டோ இவ்வுலகில்! இல்லை. வக்கிரங்களால் ஆனதுதானே இந்த மனித வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் மனதின் வக்கிரத்தின் அளவு வேறுபடுகிறது. அல்லது அதை மற்றவர் முன்னிலையில் மறைப்பதில் மனிதன் தேர்ச்சி பெற்றுவிட்டான். ஆனால் அடிப்படையில் மனிதன் வக்கிரமான மனது கொண்டவன்தான்.

சுயநலமும் மனதின் வக்கிரகங்களும்தான் மனிதனை ஆட்டிப்படைக்கிறது என சோக்ரடிஸ் சொல்கிறார். சோக்ரடிஸ் அதைச் சொல்ல அவருக்கு ஒரு நியாயம் இருந்திருக்கிறது. எல்லோருக்கும் அவரவருக்கான நியாயங்கள் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. அதன் வழி நின்றுதானே எங்களது எல்லாச் செயற்பாடுகளும் சரி காணப்படுகிறது. ஆனால் மிகச் சரியானது என நாங்கள் நம்பி இருக்கும் விடயங்களை, ‘இல்லை, நீங்கள் பிழை’ என் யாராவது பகுத்தாய்ந்து சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிற மனதுதான் எவ்வளவு பிரமாண்டமானது! ஏனெனில் வக்கிரம் கொண்ட மனது அவ்வளவு சீக்கிரத்தில் தவறுகளை ஒத்துக்கொள்வதில்லை.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விடயமும் இருக்கிறது;

தவறுகளை சுட்டிக் காட்டுவோரை கூடவே வைத்திருப்பது. இயல்பிலே மனிதன் ஒத்தோடிகளை இயைந்து வாழவே பிரியப்படுகிறான். தான் செய்வது அணைத்தையும் சரி காண்பவர்களையே சார்ந்திருக்க நாடுகிறது மனது. புகழும் தற்பெருமையும் அதைப் போசித்து ஊக்குவிக்கிறது. அதைச் செய்ய பலரும் இலகுவில் உருவாகிவிடுகிறார்கள். ஆனால் அறத்தின் வழி நின்று சரியனப் பட்டதை சொல்லோரை கண்டடைதல் குதிரைக் கொம்பு கிடைப்பதைப் போல அரிதானது. என்னைச் சுற்றிலும் நிறையவே குதிரைக் கொம்புகளை வைத்திருக்கிறேன்.தொட்டால் சுண்டும் சூடேறிய இரத்தம் போல, சீவி சிங்காரித்த குதிரைக் கொம்புகள்.

குறுந்தொகையில் மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்வதாக வருமே ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ!’; என்னை மகிழ்ச்சிப்படுத்த எதுவும் சொல்லாது, நீ கண்டறிந்தது எதுவாக இருந்தாலும் அதைச் சொல்லு’ என்பானே அறத்தின் வழி நின்ற அந்த மன்னவன், அவனின் அந்த மனநிலையைப் பெறத்தான் எனக்கு சற்றே நாளாயிற்று. பராவாயில்லை, இப்போதாவது வாய்த்ததே இந்த மனம்!

This entry was posted in சிறுகதை, பொது and tagged விமர்சனம், Camus by உமையாழ். Bookmark the permalink.

எழுதியவர் : (14-May-18, 7:11 pm)
பார்வை : 43

மேலே