நம்பிக்கை மனிதர்கள் 2 -நா மம்மது

நா . மம்மது. -

இயல் , இசை, நாடகம் என முத்தமிழில் தமிழ் இசை என்பது அருகி வரும் இன்றைய சூழலில் , தமிழிசை வரலாற்றை ஏழு ஆண்டுகளாய்ஆய்வு செய்து தமிழிசைப் பேரகராதியை உருவாக்கியவர் .தமிழறிஞர் நா . மம்மது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர் தமிழிசை பற்றி நூற்றுக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளையும்
வெளியிட்டுள்ளார் . இயற்றமிழ் , இசைத்தமிழ் என இரண்டு துறைகளிலும் மிகுந்த புலமை பெற்றவர் மம்மது அவர்கள் .

2005 டெக்ஸாஸில் நடைபெற்ற வடஅமெரிக்கத் தமிழ் சங்க பேரவை விழாவில் . தமிழிசை பேரகராதியின் கரு உருவானது இந்த அகராதியில் 5000 இசைச் சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரகராதியில் , சொற்களுக்கு விளக்கம் தருவது என்று மட்டும் இல்லாமல் , தமிழின் பழமையான நூல்களில் இருந்து தமிழ் இசை எவ்வாறு பிறந்து வளர்ந்தது என்பதை தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி நிறுவுகிறார் .

இவரது சொல்லாடல் பெரும் வியப்புக்கு உரியது . ஓசைகளில் இருந்து ராகம் வருகிறது என்பதை இவர் ராகபுடம் என்ற சொல்லாகவும் , ஆலாபனை என்பதை பண் ஆளத்தி என்றும் , Harmonical Notes or Chords - என்பதை பொருந்து சுவரக் காட்டங்கள் என்றும் நுடபமான வார்த்தைகளை கையாள்கிறார் .

தமிழின் செம்மொழி சிறப்பான ஒரு சொல் பல பொருள்கள் தருவதை தனது கட்டுரைகளின் மூலம் விரிவாக ஆராய்ந்து எடுத்துரைத்திருக்கிறார் . "நம் இசை முறையாக வரும் முறை "’ என்ற கட்டுரையில் "முறை "
என்னும் சொல்லுக்கு 22ற்கும் மேற்பட்ட பொருளை சொல்கிறார் ."தொல்காப்பிய இசை" என்ற கட்டுரையில் :பண்" - என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லையும் அதில் இருந்து உருவான 21 சொற்களுக்கும் மேல் பதிவு செய்துள்ளார் .

தமிழிசைப் பேரகராதி,ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை வேர்கள்,தமிழிசைத் தளிர்கள்,இழையிழையாய் இசைத் தமிழாய்,ஆதி இசையின் அதிர்வுகள்,தமிழிசை வரலாறு என தமிழ் இசை தொடர்பான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் .

இவர் பெற்ற விருதுகளில் சில -தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் பெரியார் விருது, தமிழக அரசின் பாரதியார் விருது ,முத்துத்தாண்டவர் தமிழிசை விருது,வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது , தமிழ் இசைப்பணி விருது ,இசைத்தமிழ் வித்தகா் விருது .

தமிழிசை சொற்பொழிவுகள் , இசை நிகழ்ச்சிகள் , ஆய்வுக்கட்டுரைகள் , வானொலி , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இசையோடு இயைந்த இவர் பயணம் தமிழர் வாழும் இடமெல்லாம் தமிழ் இசையின் நுட்பத்தையும் , தொன்மையையும் பரப்பித் தொடர்கிறது .

எழுதியவர் : பாவி (19-May-18, 11:55 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 680

சிறந்த கட்டுரைகள்

மேலே