சாதித் தமிழர்கள்

தீண்டாமையை
அழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
அழித்தால்தான்
ஆகுமென்கிறார்கள்

இரட்டைக் குவளை
முறையை
ஒழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
எடுத்தால்தான்
ஒழியுமென்கிறார்கள்

இரட்டைச் சுடுகாட்டை
இடியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
இடித்தால்தான்
முடியுமென்கிறார்கள்

பொது இடத்தில்
தண்ணீர் எடுப்பதை
தடுப்பது குற்றமென்றோம்
அதற்கு நீங்கள்
இட ஒதுக்கீட்டை
விட வேண்டும் என்கிறார்கள்

ஊரையும் சேரியையும்
இணையுங்கள் என்றோம்
இட ஒதுக்கீடு இருந்தால்
இணையாது என்கிறார்கள்

பஞ்சமி நிலங்களை
மீட்க வேண்டுமென்றோம்
இட ஒதுக்கீடு இருக்கையில்
எப்படிச் சாத்தியமென்கிறார்கள்

சாதித்திமிரில்
பெரியோரை பெயர்சொல்லி
அழைக்காதீர்கள் என்றோம்
அதற்கும் இட ஒதுக்கீட்டை
ஆதாரமாக்குகிறார்கள்


சாதியை
அழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீடு இருந்தால்
அழியாது ஒழியாது என்கிறார்கள்

சரி
இட ஒதுக்கீடு
யாருக்கெல்லாம்
தருகிறார்கள் என்றோம்?
எல்லாம் தலித்துக்குத்தான்
என்றார்கள்

தமிழ்நாட்டில்
BC-30%
MBC-20%
SC-18%
ST-1% என
அட்டவணைப் படுத்தியதும்
அமைதியானார்கள்
அந்தப் போராளிகள்

மீண்டும் சொல்கிறோம்
சாதி ஒழிப்பைத் தடுப்பது
இட ஒதுக்கீடு அல்ல
அழுக்கு நிறைந்து
இறுகிப்போன
உங்களின் இதயம்தான்.

எழுதியவர் : க.தங்கமணி (5-Jun-18, 1:34 pm)
பார்வை : 252

மேலே