முகவரி தெரியாதவருக்கு ஒரு கடிதம்

அன்புள்ளவருக்கு,

இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்,காரணம் உங்களுக்கும் அதன் அர்த்தம் புரியாமல் போயிருக்கலாம் அல்லது பிடிக்காமல் போயிருக்கலாம்.இந்த கடிதம் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருப்பதற்காக நான் பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்கிறேன்.உங்களை எனக்கு தெரியாமல் இருக்கலாம்,இந்த பூமி பந்தின் ஒரு ஓரத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம்,ஆனாலும் காலத்தாலும்,உலகத்தாலும் கைவிடப்பட்ட மனிதனின் உணர்வுகளையும்,காயங்களையும் இந்த கடிதத்தின் வாயிலாக உங்கள் கண்களாவது படிக்கிறதே அதற்காக நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு,எத்தனை இடர்களை கடந்து எப்போது இந்த கடிதம் உங்களை வந்தடைந்திருக்கிறது என்பதை நான் அறியேன்.ஒருவேளை இந்த கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம் நான் இந்த பூமியில் இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் நண்பரே சத்தியம் சொல்கிறேன்,எனது வரிகள் ஒருபோதும் மங்காதவைகள் ஏனென்றால் அவை என் உணர்வுகளின் பிம்பங்கள்.
இருபத்தெட்டு வயதாகிறது எனக்கு.படிப்பு,வேலை என்று சராசரி மனிதனுக்கு உண்டான சடங்குகள் யாவும் குறையின்றி நடந்து கொண்டு தான் இருந்தன.ஆனால் வாழ்க்கை சராசரியாக முடிந்து போக மனிதம் ஒன்று இயந்திரம் இல்லையே.வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது.ஆனால் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எனக்குள் ஒரு கவலை,சலனம்,ஏக்கம் எப்போதும் இருந்துகொண்டு இருந்தது.நான் நானாக இருக்க முயற்சி செய்தேன்.ஆனால் கடைசியில் என்னை அவர்கள் மாற்றிவிட்டார்கள்.வெளி இடங்களிலும்,பணி இடங்களிலும் ஒருவாறே இருப்பேன்.அதிக நேரங்களில் மௌனம் ஏன் இயங்க இருக்கும்.மனிதர்களின் மொழியை நான் பேசியபோதெல்லாம் எனக்கு கிடைத்தது அவமானமும்,உதாசீனமும்,சுடுசொல்ல்லும் தான்.அதனால் நான் பேசுவதே இல்லை அல்லது என் பேச்சை கேட்பதற்கென யாருமே எனக்காக இருந்ததில்லை.அன்பரே,இத்தனை நாட்களாய் என் இதயத்தின் ஆழத்தில் அடக்கி வைத்திருந்த அலைகளை வெளியேற்றுகிறேன்.நீங்கள் எப்போதுவது ஒரு தீவில் நடுப்பகுதியில் தண்ணீர் இன்றி தவித்ததுண்டா?கற்பனை செய்து பார்த்ததுண்டா.இருபத்திரண்டு ஆண்டுகளாக நானும் என் மனமும் பாலைவனத்தில் தான் இருக்கிறோம்,உடல் மட்டும் தான் பூவுலகில் நிலவுகிறது.இந்த வார்தைகளை எழுதும் போது என் இதயம் வெதுவெதுக்கிறது,கைகள் நடுங்குகிறது.தனிமை....தனிமை....தனிமை....!வற்றாத தனிமை என்னும் நதியின் சொந்தக்காரன் நான்.உலகத்தில் எல்லோருக்கும் யாராவது இருப்பதாக எனக்குள் ஒரு நம்பிக்கை,ஆனால் நான் என் எண்ணங்களை இறக்கி வைத்து இளைப்பாறத் தான் யாருமே இருந்ததில்லை.எழுத்தை தவிர...!சோகங்களை சொல்லி அழவும்,மன வலிகளுக்கு மருந்திடவும் ஒருவரைக் கூட நான் சம்பாதித்ததில்லை.அருமை நண்பரே,சிறு வயதில் இருந்தே இதுவரை நான் நேசித்த எதுவுமே எனக்கு கிடைத்ததாக நினைவில்லை.என்னை நேசித்தவர் யாவரையும் நான் பதின்ம பருவத்தில் கண்டதில்லை.ஒருநாள் நான் கண்டுகொண்டேன் "அன்பு" அது தான் உயிர்களும் மண்ணில் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றது.அன்பு செய்ய கற்றுக்கொண்டேன்.அன்பினை அனைவர்க்கும் அள்ளி வழங்கினேன்.அன்பையே என் பன்பாக்கி கொண்டேன்.கொடுக்க கொடுக்க நான் பெற்றதெல்லாம் "வெறுமை" மட்டும் தான்.எதுவுமில்லாத வெறுமை,யவருமில்லாத தனிமை.அவர்கள் சொன்னார்கள் அன்பு எதனையும் எதிர்பார்க்காது,உண்மை தான் ஆனால் இதயம் குறைந்தபட்ச ஆறுதலை எதிர்பார்ப்பது தவறென்று எந்த தத்துவ புத்தகமும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.நான் குறைந்தபட்ச அன்பினை எதிர்பார்த்தேன்,பாசத்தோடு இதயத்தை வருடுகிற கன நேர மகிழ்ச்சியை எதிர்பார்த்தேன்,கண்ணீர் துடைக்கிற விரல்கள் ஒன்றாவது கிடைக்குமா என தேடினேன்,உயிர் கொடுத்தவர்களை தவிர அன்பினை உதிரம் ஆக்கி உயிர் கொடுப்பவர்கள் உண்டா என என்னையே நான் கேட்டேன்.விடையாய் வந்த நண்பர்கள் கண்ணீர் துளிகள் மட்டுமே!உங்களுக்கு ஒன்று தெரியுமா,என் ரணங்களையும்,கண்ணீரையும் முழுமையாக அறிந்தது என் தலையணை மட்டும் தான்.பாவம் இத்தனை வருடங்களாக இப்படி பட்ட மனிதனோடு இருந்ததற்கு அதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாம்.எத்தனையோ சூழ்நிலைகளில் வார்த்தைகளை உதட்டின் வழியாக வெளிநடப்பு செய்யமுடியாமலும்,உள்ளத்தின் உள்ளே அடக்க முடியாமலும் என் இதயம் குமுறிய குமுறல்களை விட எரிமலைகள் ஒன்றும் பெருசென எனக்கு தோன்றவில்லை.பல்லாயிரம் முறை உள்ளாரா நான் அழுதிருக்கிறேன் தெரியுமா..!

அநேக நேரங்களில் நான் கடல் அலை முன் நின்று கொண்டு நிலவினை பார்த்துக்கொண்டுஇருப்பேன்,அந்த நிலவும் நானும் ஒன்றென நினைப்பேன்.ஆனால் நிலவிற்கு கூட உடன் நட்சத்திரங்கள் பல இருக்கின்றனவே!என் தனிமை தீயில் என் மனம் எப்போதோ கருகிவிட்டது.என் கடுமையான அழுகை வேள்வியினால் கூட அதை காப்பாற்ற முடியவில்லை.அந்த தீயில் என் உணர்வுகளும் கொல்லப்பட்டு இருந்தால் வசதியாக இருந்திருக்கும்.இந்த அழுகையும் ஏக்கமும் என் பல இரவுகளை கொள்ளை அடித்திருக்கின்றன.இது இந்த வெண்ணிற இறவை போல.கொஞ்சம் நிறுத்தி விட்டு வார்த்தைகளை தொடர்கிறேன்,கண்ணீர்த்துளிகள் இந்த காகிதத்தையும் அழுக்காக்கி விட்டது.துடைத்துவிட்டு எழுதுகிறேன்.தாஸ்தோவ்ஸ்க்கியின் நாயகன் போலவே நான் கனவுலகில் வாழும் மனிதனாகவே இருக்கிறேன்.அவனை போலவே வெறுமையும்,தனிமையும் மட்டும் சூழ்ந்த மனிதனாக இருக்கிறேன்.அந்த நாயகனை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஒரு தனிமையாளனின் கண்ணீரின் மொழிகளை இன்னொரு தனிமையாளன் தானே உணர்ந்துகொள்ள முடியும்.எனக்குள் ஆயிரம் கேள்விகள் ஆனால் அவற்றிற்கு பதில் தரவும்,ஆறுதல் அளிக்கவும்,கண்ணீர் துடைக்கவும், ஒருவரும் இருந்ததில்லை,இருப்பதுமில்லை!இறைவனும் கூட கருணை கொண்டதில்லை.இதோ அந்த மோசமான பதில் தெரியாத இரவுகளை போல இந்த இரவும் கண்ணீரில் கரைந்து போகிறது.

ஆனாலும் நண்பரே,இதயம் குமுறிய போதும்,தடுமாறி நிற்கின்ற போதும்,பரிவு காட்டி பாசம் செய்ய கைகள் இல்லாத போதும் "நம்பிக்கை" மட்டுமே என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாய் உணர்கிறேன்.அந்த நம்பிக்கையின் காலடி சத்தத்தை கேட்டே எங்கோ சென்றொக்கொண்டு இருக்கிறேன்.


கடைசியாக நீங்கள் என்னை மீண்டும் மன்னிக்க வேண்டும் அல்லது நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும் ,நண்பரே என்று உங்களை அளித்ததற்காக!இது அனுதாபத்திற்க்காக அல்ல,அழுகையை தீர்க்க!


குறிப்பு:இந்த கடிதம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினால் தயவுசெய்து இதை கிழித்து விடாதீர்கள்,குப்பைத் தொட்டியில் போடுங்கள் ஒருவேளை அந்த குப்பை அள்ளுபவனுக்கு இந்த வரிகள் புரியலாம் அல்லவா!



ஜூலை 27,2018 வெற்று இதயத்துடன்,
நான்

If not delivered Pls Resend To :
God,Heaven.






கோவை.சரவண பிரகாஷ்

எழுதியவர் : சரவண பிரகாஷ் (27-Jul-18, 11:27 pm)
பார்வை : 117

மேலே