புதிரானவள் நீ

ஒரு கவிதையைப் போலிருக்கிறாய்
புரிந்தும் புரியாமலும்
ஒவ்வொரு வாசிப்பின் முடிவிலும்
வெவ்வேறு அர்த்தமாகிறாய்
உன்மொழி கற்றுத்தா
ஒரு பொழிப்புரையெழுத

நம் மௌனங்கள் பரிமாறிக்கொள்ளும்
பரிபாஷையே போதுமானது
வார்த்தைகள் தேடிக் களைக்கும்
நம் சம்பாஷணைகளுக்கு
மௌனமே அடைக்கலமளிக்கிறது

பெருமழையில் கலைந்துபோகும்
மண்குவியலைப்போல்
உன்னில் கரைந்துபோக
வேட்கை கொள்கிறேன்
உன்னிசைவை ஒருமுறை சொல்
உன்னீர்ப்பு விசையில்
என்னைத் தொலைக்கிறேன்.

அருகில் செல்கையில் விலகிச்செல்லும்
கானலைப்போல் மாயமாகிறாய்
ஒரேயொரு முறை உன் காதலை மொழிந்து செல்
நீ மீண்டும் தோன்றும் கணம் வரை
உயிர்த்திருக்க

- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (30-Aug-18, 7:34 pm)
பார்வை : 482

மேலே