இருட்டு
இருளை போர்த்தி
தூங்கும் சூரியன்
உழைத்து தேய்ந்து
ஒருநாள் விடுப்பில் சந்திரன்
வெளிச்சமில்லா உலகின்
ஒற்றை வண்ணம் கருப்பு
இருளுக்கு அழகு இருக்கா ,
பிரபஞ்ச பிறப்பே இருள்
நம் பிறப்பு தொடங்கிய
இணைப்பு இருள் ,
கருத்தரிப்பு இருள் ,
கருவறையும் இருள் ,
கரு வளர்ச்சியோ
விதைக்குள்ளிருந்து
செடி வளர்ச்சியோ
இருட்டுக்குள்ளிருந்துதான் ,
இருள்வெளியில் தனியொருவனாய்
நின்றுபார்த்தால் புரியும்
நம் உயிரின் இயக்கமும்
இந்த உலகின் இயக்கமும் .
பார்வையை இழந்தவுனுக்கும்
கண் இமை மூடியவனுக்கும்
வெளிச்சம் கூட இருள்தானே .
மனிதனுக்கு
அறியாமையும் புரியாமையும்
ஒளி இருந்தும்
இருள் நிரந்தரம்,
இயற்கை தந்த கதிரொளியும்
செயற்கை தந்த மின்னொளியும்
இடை வந்த வெளிச்சங்கள் .
ஆந்தைக்கு இருளே அருள்
வவ்வாலுக்கு
அது எழுப்பும் ஒலியே வெளிச்சம் .
அகவெளிச்சம் கண்ட ஞானிகளுக்கு
அறிவே வெளிச்சம் .