சிரிஷ் ஷிரிஷ் ---பயணம்------ பயணப்பை, பயணப்பாதை, பயணநேரம், பயணக் களைப்பு ---- நடைப்பயணம் - சுற்றுப்பயணம் - கலைப்பயணம் - வாழ்க்கைப்பயணம்

“டிசம்பர் 19,
ராஜஸ்தான் பயணத்தின் ஒரு பகுதியாக பிகானரில் இருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டுயிருக்கையில் back bag அணிந்து இருந்த ஒரு இளைஞன் எங்கள் வண்டியை கண்டு lift கேட்கும் சைகையை காட்டினார். வண்டி சிறிது தூரம் சென்று பின் திரும்பி வந்து அவரை ஏற்றி கொண்டோம்.

அவர் பெயர் ஷிரிஷ், 21 வயது, சொந்த ஊர் இண்டோர் (Indore) மத்தியபிரதேசம், நடுத்தர வர்க்க குடும்பம், தந்தை சிறு கடை நடத்தி வருகிறார். இளங்கலை ஜர்னலிசம் முடித்துவிட்டு ஒரு வருடம் Decathlonல் வேலை செய்துவிட்டு தற்போது பயணத்தில் இருப்பதாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அவரது பயண திட்டம், காஷ்மீரில் ஆரம்பித்து ஒன்பது மாநிலங்கள் வழியாக நாற்பத்தி ஐந்து நகரங்களை கண்டு இறுதியாக கன்னியாகுமரியை சென்று அடைவது. இப்பயணத்தின் சிறப்பம்சம் ” மொத்த பயணத்தையும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் முடிப்பது”.

இதை கேட்டதும் நங்கள் அனைவரும் திடுக்கிட்டோம். அது எப்படி சாத்தியம் என்ற எங்கள் வினாவிற்கு அவர் சிரித்து கொண்டே, நவம்பர் 14 அன்று காஷ்மீரில் பயணத்தை ஆரம்பித்தேன் இன்றுடன் 36 நாட்கள் முடியப்போகின்றன இன்றுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. மொத்த பயணமும் ‘Hitchhiking’ என்று சொல்லப்படும் எதிர் வரும் வாகனத்தில் lift கேட்டு பயணிப்பது முறையில் இரண்டு சக்கர வாகனம் முதல் லாரி வரை கிடைக்கும் வண்டியில் பயணிக்கிறேன் என்றும், இரவு தான் கொண்டு வந்துள்ள சிறு கூடாரத்தில் தங்கி கொள்வதாகவும் ஆனால் இன்றுவரை இரு இரவுகள் மட்டுமே சாலையோரத்திலும் மற்ற நாட்கள் பெரும்பாலும் இவர் பயண திட்டத்தை கேட்ட நபர்கள் அவர்கள் வீட்டில் தங்கவைத்து கொண்டார்கள் என்றும் உணவை பொருத்தவரை யாரிடமும் தான் கேட்பதில்லை என்றும் யாராவது வாங்கி கொடுத்தால் வாங்கி கொள்வதாகவும் கூறினார்.

தனது பயணத்தைப் பற்றி Instagram-ல் தொடர்ந்து பதிவிடுவதால் அதை தொடரும் சில நண்பர்கள் தாங்களோ அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களின் மூலமாகவோ சில நேரங்களில் தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். மதிய உணவு, மாலை தேநீர் என்று வண்டி ஆங்காங்கே நின்ற போதிலும் உரையாடல் உற்சாகமாக தொடர்ந்துகொண்டே இருந்தது. இரவு வரை ஷிரிஷ் எங்களுடன் பயணித்து ஜெய்பூரில் எங்களை ஆரத்தழுவி நன்றி கூறினார். நாங்கள் காணும் கனவை நீங்கள் செயல்படுத்தி கொண்டு இருக்குரீர்கள். எனவே உங்களை சந்தித்ததில் எங்களுக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி என்று கூறி விடைபெற்றோம்.



அவரின் உரையாடலில் இருந்த சில முக்கிய அம்சங்கள்;

* சிறுவயதிலிருந்தே படிப்பதும் பயணம் செய்வதுமாக இருந்து வருகின்றேன் இவை எனக்கு என்னை தெரிந்துகொள்ளவும் உலகத்தை புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

* இந்த பயணத்திற்கான பெரிய தூண்டுகோல் “Into Wild”. ஐந்து, ஆறு முறை இந்த படத்தை பார்த்திருப்பேன் மேலும் வட்டார செய்தித்தாளில் எனது நகரைச் சேர்ந்த ஒருவர் ராஜஸ்த்தான் மாநிலம் முழுவதும் ‘Hitchhiking’ முறையில் பயணம் செய்துவந்த செய்தி இருந்தது. உடனடியாக அவரை சென்று பார்த்துவிட்டு இந்த பயணத்தைப் தீர்மானித்துவிட்டேன்.

* எதிர்பார்த்ததைவிட செல்லும் இடமெல்லாம் மக்கள் அன்போடும், நட்போடும் பழகுகிறார்கள். இதுவரை ஒரு வேளைக்கு மேல் எங்கும் பட்டினியாக இருந்ததில்லை.

* “Do what you want to do”…. “Go out of your comfort zone” “Believe in yourself” இவையே என் தாரகமந்திரம்.

பயணம் செய்வதற்கு மனம் தான் தேவையேயன்றி மற்றவையல்ல என்று ஜெயமோகன் அடிக்கடி கூறுவதற்கு சிறப்பான உதாரணமாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட நபரை சந்தித்து அவரின் பயணத்தில் சிறு பங்கெடுத்ததில் எனக்கு பெரும் மகிழ்வும் நிறைவும்.
----------------------------------------------------------------------------------
செந்தில்குமார் – சென்னை
---------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (21-Feb-19, 4:29 am)
பார்வை : 14

மேலே