நினைவலை

நினைவலை


நிழல் தவிர்த்த வெளிகளை
அடைத்து நிறைத்திருக்கிறது வெயில்..

பாரபட்சம் பாராமல் எவ்விடமும்
சுழன்றடிக்கிறது காற்று..

புழுதியுடன் பறக்கிறது
பறவைகள் உதிர்த்த மென்னிறகுகள்

உடைமர முட்கிளையிடை
கூடு கட்டுகின்றன காடை, கவுதாரிகள்

காளைகளின் கழுத்து மணியோசையுடன்
நகர்கிறது மாட்டு வண்டி

சாணியள்ளி கூடை நிரப்புகிறாள் ஒரு பெண்
ஒய்யாரமாய் வெளித்திண்ணையில்
ஒய்வெடுக்கிறது ஒரு நாய்

சிறு உறுமலுடன் நிறைய குட்டிகள்
பின் தொடர ஓடிச்செல்கிறது தாய்ப் பன்றி..

தடதடக்கும் மின்சார ரயிலின் ஓசையில்
திடுக்கிட்டு விழிக்கிறேன்
சுகக்கனவைத் தொலைத்து….

எழுதியவர் : பத்மநாபபுரம் அரவிந்தன் (2-Mar-19, 10:26 am)
பார்வை : 114

மேலே