உழவின்றி உலகில்லை

உலகத்தின் உயிர்நாடி
உழவென்றால் மிகையில்லை!
உழவனைப்போல் உழைக்கும் வர்கம்
உலகினிலே வேறில்லை!

வேட்டையாடும் வேலை தவிர
வேறென்ன அறிந்திருந்தோம்?
வேளாண்மையின் மேலாண்மையால்
விதைத்துண்ணும் வித்தை கற்றோம்!

உழவென்ற தொழிலொன்றே
உயர்த்தும் இந்த உலகை!
அது பூமி எனும் புத்தகத்தில்
கலப்பை எழுதும் கவிதை!

தோட்டமெல்லாம் அழித்துவிட்டு
தொழிற்சாலை தொடங்கினோம்! - நாளை
ஆலைக் கழிவால் ஆயுள் குறைந்து
ஆறடிக்குள் அடங்குவோம்!

உறுதி எடுத்து உயர்த்திடுவோம்
உலகைக் காக்கும் உழவை!
உழவனுக்கே வழங்கவேண்டும்
உலகின் சிறந்த விருதை!

வேதங்களைப் போலவே
வேளாண்மையும் உயர்ந்தது!
மனிதகுலம் ஏனோ அதன்
மகத்துவத்தை மறந்தது!

எழுதியவர் : நிலவை பார்த்திபன் (22-Mar-19, 7:48 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 114

மேலே