நாகரீக கோமாளிகள்

ஆரியன் வந்தான்
சாத்திரத்தையும் சாதியையும்
விதைத்தான்..!

மொகலாயன் வந்தான்
மதத்தையும் மதத்தால்
அழிவையும் விதைத்தான்..!

ஆங்கிலயன் வந்தான்
சுரண்டலையும் அதனால்
பசியையும் வறுமையும்
விதைத்தான்..!

ஏமார்ந்த தமிழன்
எல்லாவற்றையும்
ஏற்று கொண்டான்..!

தன்னை தானே
இழித்து கொள்ளும்
தரங்கெட்ட நிலைக்கு
தாழ்ந்தும் போனான்..!

கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான்..!

ஈழம் சென்று
கங்கை கொண்டு
கடாரம் வென்று
இமயத்தில்
கொடி நாட்டியவன்..!

இன்று
இனம் பிரிந்து
மொழி மறந்து
அகதிகளாய்
முகம் தொலைத்து
முகவரியற்று அலைகிறான்..!

இன்று
அங்கவையும் சங்கவையும்
கேலிபொருள்கள்
கோப்பெருந்தேவியும்
குழல்வாய்மொழியும்
விலைமாதர்கள்..!

தமிழ்
பேசினால் பாவம்
தமிழ்
படித்தால் சாபம்..!

தம்
இனம் மறந்து
மொழி தொலைந்து
திரியும் இவன்
அடுத்த நுற்றாண்டில்
அழிந்து போவான் ..!

ஒரு இனத்தின்
அடையாளமே
அதன் மொழியே;
மொழி அழிந்தால்
நிச்சயம் அந்த இனம் அழியும்..!

- அ. எழில் அரசி.
Posted by Tamil

எழுதியவர் : (15-Apr-19, 10:37 pm)
பார்வை : 48

மேலே