மொட்டுக் கவிஞர்கள் !
மரபு களைந்து மண்பிறந்த
புதிய பூக்கள்!
தமிழ் சிட்டுக்கள்
மலர் மொட்டுக்கள்!
இளமையின் இயல்பில் முதிர்க்கும்
மொட்டுக் கவிஞர்கள்!
திகட்டாத மொழிப்பற்று
தமிழ் இவர்க்கு தேன்சொட்டு!
சொல்லாற்றல்…
நிற்காத நீருற்று
மனம் மயங்கும் இசைப்பாட்டு
தெற்கின் தென்றல் காற்று!
இவர் வரிகள்…
விட்டில் விலாசங்கள்
துப்பாக்கி ஏறாத தோட்டாக்கள்
ஆயினும்,
இதயம் துளைத்து
இன்பம் சுரக்கும் இனிய வரிகள்!
உதடுகளுக்கு உள்ளிருந்து
உழைத்து மகிழும் உமிழ்நீராய்
உணர்வுகள் உரைக்கும்
உன்னதங்கள்!
வளை ஓசையாய் வார்த்தை விளம்பி
தாயின் தாலாட்டாய் தமிழ் சொல்லும்
இசை நாளங்கள்!
இங்கிதம் அகற்றி இசைத்து
சத்தியம் சொல்லும்
விவேக முத்திரைகள்!
சுவாசித்தல் போன்று எளிதாய்
கண்கள் வாசித்து விடும்
கண்ணாடிப் பிம்பம்கள்!
பூவைத்த பூவைகளின்
மணக்கும் புன்னகையாய்
காதல் கவியும்
சில்லரை ஓவியங்கள்!
பூ களைய மணம் மாயும்
விழித்தெழுந்தால் மனம் காயமென
நிகழ்கால காதல் பகரும்
நித்திரை நிறுத்தங்கள்!
மொட்டுக் கவிஞரின்
மோகன வரிகள்!!
காதல் முகவரிகள்!
இலக்கணம் களைந்து
இதயத்தோடு இயைந்து
இயல்பாய் பிறக்கும்
உரித்த பலாச்சுளைகள்!