உனக்கெனவே பிறந்தவள்

உனக்கெனவே பிறந்துவிட்டேன்
உயிரினிலும் கலந்துவிட்டேன்
நிழற்படங்கள் பிரித்துக்கொண்டால்
உணர்வுகள்தான் பிரிந்திடுமோ!

வளைக்கரங்கள் ஒலியெழுப்பி
கனவுகள் கலைத்த பொழுதுகளின்
நினைவுகள் எல்லாம்
இமைப்பொழுதில் மறந்திடுமோ!

அலையலையாய் படையெடுத்த
முத்தங்களை அருவியெனவே
அள்ளிப்பருகி தாகங்கள் தீர்த்த
அதிகாலை இனிமேல் தினமும்
விடியாமல்தான் போய்விடுமோ!

மழை மேகங்கள் கூடி களிப்பதுபோல்
குடைக்காளான்களாய் நனைந்து
இன்பம் கொழுத்ததெலாம்
மழை பொய்த்தால் செல்லரித்திடுமோ!

இரு கைகள் எழுப்பிய எழுதிய
ஓசைகளின் சங்கேத குறிப்புகள்
மேற்கு தொடர்ச்சி மலைகளில்
மோதி மோதி எதிரொலிக்காமல்
காற்றோடுதான் கரைந்திடுமோ!

இமைப்பொழுது கூட
பிரியமாட்டேன் என்ற உறுதி எல்லாம்
என் உடல் சூட்டில் பொசுங்கி
அடங்கியதை தாமதமானாலும்
ஏற்றுக்கொள்ள காலங்கள்தான் மறுத்திடுமோ !!!..........

எழுதியவர் : மேகலை (16-Jun-19, 12:15 pm)
பார்வை : 609

மேலே