அறிவில்லாத் துர்ச்சனரைச் செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ - நீதி வெண்பா 21
நேரிசை வெண்பா
அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ - திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை. 21
- நீதி வெண்பா
பொருளுரை:
அழுக்காறு பொருந்திய மனத்தையுடைய அறிவில்லாத துட்டரை, நேர்மையுள்ளவராக ஆக்குவதற்குரிய செய்கை உள்ளதா? இல்லை;
உள்ளியினுடைய துர்வாசனை சுத்தமான நல்வாசனை உள்ளவை பல கலந்தாலும் நீங்குமோ? நீ சொல்.
அது போலத்தான் பொறாமையும், நன்மை தீமை அறியாத தீமை குணங்கள் நிறைந்தவனை நல்லவனாக மாற்றிட முடியாது என்கிறது இந்தப் பாடல்.