மனசு பேசுகிறது முகிலினி

முகிலினி...



எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்...



யார் இந்த முகிலினி...?



கதையின் நாயகியா..? கதையின் களமா..?



ஆம் நாயகியும் இவளே... களமும் இவளே... இவளின் இருபுறமும் மூன்று தலைமுறைகள் ஆடிய ஆட்டத்தின் வரலாறே எழுத்தாய்...



அறுபதாண்டு கால வரலாற்றை இத்தனை செய்திகளுடன் அந்தந்த காலகட்ட அரசியல் பின்னணியுடன் நிழல் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நிஜ கதாபாத்திரங்களையும் இணைத்துச் சொல்லுதல் என்பது எளிதல்ல... அப்படியான வாழ்க்கையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.



சிறிய நாவல்களில் இருக்கும் ஈர்ப்பு எப்போதும் பெரிய நாவல்களில் இருப்பதில்லை... அதுவும் மிகப்பெரிய நாவலின் பக்கங்களைக் கடத்துதல் என்பது அது நம்மை ஈர்த்தால் மட்டுமே சாத்தியம்.



சில நாவல்களில் ஆசிரியரின் மேதாவித்தனம் நம்மை ஆரம்பத்திலேயே மூடி வைக்கச் சொல்லிவிடும்... சில நாவல்கள்தான் ஆசிரியரின் எழுத்து நடை நம்மை அதற்குள் மூழ்கடித்து வைக்காது வாசிக்கச் சொல்லும். இது இரண்டாவது ரகம்... கீழே வைக்க விடாமல் வாசி... வாசி... என ஈர்க்கும் ரகம்.



இரா. முருகவேள் அவர்களின் எழுத்தை முதல் முறை வாசிக்கிறேன்... செய்திகளே அதிகம் என்றாலும் சோர்வடையவோ, அயற்சி கொள்ளவோ விடாத அசாதாரண எழுத்து நடை... ஈர்ப்பு... அப்படியொரு ஈர்ப்பு... வியப்பில் ஆழ்த்தும் நடை.



487 பக்கங்களை ஒரே மூச்சில் வாசித்து முடிக்கச் சொல்லும் புத்தகம் ஆசிரியரின் வெற்றி.



மூன்று தலைமுறைக் கதைகள் என்றாலும் தொடர்ச்சியாய் அவர்களின் வாழ்க்கைக்குள் பயணிக்கும் கதையும் அல்ல... இப்படியாக இருந்தார்கள்... இப்படியாக வாழ்ந்தார்கள் என்ற கதையை மட்டும் சொல்லிச் செல்லும் கதையும் அல்ல... அதையும் தாண்டி விரிவாய் பேசும் கதை.



எவ்வளவு செய்திகள்... எத்தனை விளக்கங்கள்....



பஞ்சாலை குறித்து...



அணை கட்டுதல் குறித்து...



விவசாயம் குறித்து...



கழிவு நீர் குறித்து...



போராட்டங்கள் குறித்து...



இன்னும் இன்னுமாய்...



கொள்ளை... கொலை... வழக்கு... வெற்றி... இயற்கை விவசாயம்... ஆர்கானிக் உணவுகள்... பஞ்சம்... பசி... நோய்.... இடையில் காதலும் என நிறையப் பேசியிருக்கும் கதைக்குள்...



எண்ணற்ற விவரங்கள்... விவரணைகள்... விளக்கங்கள்...



இந்த நாவலுக்கான ஆசிரியரின் உழைப்பை பக்கத்துக்குப் பக்கம் பார்க்க முடிகிறது. அவருக்கு உதவியாய் இருந்தவர்கள் என நிறையப் பேரை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்.



கோவை சரஸ்வதி மில்லில் வேலை செய்யும் ராஜூ, தனது நிறுவனம் இத்தாலி நிறுவனத்துடன் இணைத்து ஆரம்பிக்க இருக்கும் புதிய மில்லான டெக்கான் ரேயான் கட்டுமானப் பணிக்குப் போன இடத்தில் மலை முகடுகளோடும் அதனுடன் உறவாடும் மேகக்கூட்டத்தோடும் கொஞ்சி விளையாண்டு குதித்தோடி வரும் பவானியால் கவரப்படுகிறார்...



பவானி என்ற வடசொல் அவருக்குப் பிடிக்கவில்லை... அழகிய தமிழில் தனக்குப் பிடித்த மாதிரி... முகில்களுக்குள் குதித்தோடு வருபவளை முகிலினி என்று அழைத்து மகிழ்கிறார். ஆம் அவர் வைத்த பெயர்தான் முகிலினி. முகிலினி மீதான அவரின் பாசம் மூன்றாம் தலைமுறையான அவரின் பேரன் கௌதம் வரை தொடர்கிறது.



குடும்பமே தங்களது விடுமுறை நாட்களை முகிலினியோடு உறவாடி மகிழ்கிறது. ராஜூவின் பேரன் கௌதம் வர்ஷினியைக் காதலித்தாலும் முகிலினி மீதான காதல் குறையவில்லை. அதனாலேயே தன் முதல் கேசில் வெற்றி பெற்று திருமணம் நிச்சயமான பின் ஒரு மழை இரவில் முகிலினியைத் தேடிப் போய் மழையோடும் அவளோடும் இரவைக் களிக்கிறான்.



இந்த நேரத்தில் இங்கு என்ன பண்ணுகிறாய் என்கிறாள் முகிலினி... உனக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தேன் என்றதும் அவள் ஓ வெரிகுட் என்கிறாள். அந்த இடத்தில் முகிலினிக்கு எல்லா மொழியும் தெரியும் என்ற சொல்லாடல் வேறு. அதன் பின் அவள் உன் வருங்கால மனைவி எப்படியிருப்பாள் என்று கேட்க, உன்னைவிட அழகாக என்று சொல்கிறான். அந்தளவுக்கு அவனுக்கு முகிலினி மீது காதல்... அது நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.



முகிலினி கலகலவெனச் சிரித்தபடி அவனுடன் அவன் வீடு வரை வந்ததாய் கதையை முடித்திருப்பார்.



அணை கட்டுவதில் ஆரம்பிக்கும் கதையில் ராஜூ சைக்கிளிலில் பயணிப்பார்... அப்படியே தொடரும் கதை... பேரன் கௌதம் அவளுடன் உறவாடி மகிழ்வதுடன் முடிந்திருக்கும். இதற்குள் ஏகப்பட்ட வாழ்க்கைக் கதைகள் வந்து போய்க் கொண்டிருக்கும்.



ராஜூ, ஆரான், கஸ்தூரிச்சாமி, சௌந்தரராஜன், சௌதாமினி, மரகதம், மணிமேகலை, கிருஷ்ணகுமார், பொன்னாத்தா, மாரிமுத்து, ராஜ்குமார் பாலாஜி, லதா, சந்துரு, திருநாவுக்கரசு, வர்ஷினி, மூர்த்தி... என இன்னும் நிறையப் பேர் வாழ்ந்திருக்கும் வாழ்க்கைக்கதைதான் இது.



அவன்... இவன் என்று ஆரம்பித்து அவர்... இவராகி... அந்த அவர் இவர்கள் மறைந்து... அல்லது இனி உழைக்க வயதில்லை என ஒதுங்கி... அடுத்த தலைமுறை எழுந்து... உழைத்து... இன்னும் சிறப்பாக வாழ்ந்து... இப்படியாக பவானி ஆற்றங்கரையில் பயணிக்கும் கதைக்குள்தான் எத்தனை விதமான செய்திகள்... எல்லாம் தேதி... பைல் நம்பர் என அத்தனை தரவுகளுடன்.



பொங்கிப் பெருகி ஓடி வரும் பவானிக்குள் ஆலைக் கழிவுகளை இறக்கிவிட்டு... அவளைக் கறுப்பாக்கி... அதனால் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் வரும் நோய்கள்... சாவு...



ஆலைக் கழிவுகளை ஆற்றில் கலக்கக்கூடாது என வெடிக்கும் போராட்டங்கள்... தடியடி... வழக்குகள்...



ஆலையை இழுத்து மூடும்போது வேலை பார்த்தவர்கள் சாப்பாட்டுக்கு பட்ட பாடு... அவர்களின் வேதனை...



அரிசி கிடைப்பதில் இருக்கும் சிக்கல்... கோதுமைக்கான அலைச்சல்...



ஆற்றுப் பகுதியில் விவசாயம்... மீன் பிடித்தல்...



மூடிய ஆலைக்குள் செப்புக்கம்பிகளையும் மோட்டார்களையும் திருடி விற்றல்... ஒரு கட்டத்தில் அழிஞ்ச கம்மாயில் மீன் பிடிப்பது போல் ஆக...



போலீஸ் பாதுகாப்பு...



கைது... தப்பியோட்டம்... தலைமறைவு...



போலீஸ் சொல்லி, அவர்களுக்கு கமிஷனுடன் மீண்டும் திருட்டு...



திருட்டின் விளைவாக ஒரு கொலை...



அதன் பின்னான நீதிமன்ற வாதங்கள்...



இயற்கை விவசாயம்... ஆர்கானிக் காய்கறிகள்... அதனுள் இருக்கும் முதலாளித்துவ அரசியல்...



வக்கீல் சந்துருவுக்கும் வர்ஷினிக்குமான காதல்...



என கதை நகர்த்தல் மிகச் சிறப்பாய்....



அருமையானதொரு நாவல் முகிலினி.



வெள்ளைக்காரனிடம் மாட்டியிருந்த நாம் இப்போது அரசியல் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிச் சீரழிக்கிறோம்.



ஆரம்பகால மக்களுக்கான அரசியலும் அதன் பின் முதலாளிகளுக்கு பாதுகாப்பாய் நிற்கும் அரசியலும் இதில் பேசப்பட்டிருக்கு.



பக்தவச்சலம், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், அம்மா என அத்தனை பேரின் அரசியல் காலமும் இந்த அறுபதாண்டு கதைக்குள்....



ஒரு உண்மைக் கதையை... உண்மையான கதாபாத்திரங்களை வைத்து... அதனுடன் கதை மாந்தர்களையும் உலவ வைத்து, போராட்டங்கள், அடிதடி, பஞ்சாலை, நீர் மாசு என எல்லாவற்றையும் ஆதாரத்துடன் பேசியிருப்பதில் முகிலினி வெற்றி வாகை சூடியிருக்கிறது என்றால் அத்தனை மாலைகளும் இவ்வளவு உழைத்த, இவ்வளவு செய்திகளை எழுத்தாக்கிய ஆசிரியர் இரா. முருகவேளுக்குத்தான் விழ வேண்டும்.



செய்திகளே அதிகமென்பதால் இங்கு விரிவாகப் பேசவில்லை... வாசியுங்கள் நாவல் உங்களுடன் பேசும்.



முகிலினி மிக அருமையானதொரு நாவல்.



கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (3-Jul-19, 6:59 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 59

மேலே