கனவெனும் கன்னியவள்

நெருப்பாற்றைக் கடந்து
முதிர்காடுவழி நடந்து
இளைப்பாற இடம்தேடி
இறுதியில் கண்டறிந்த
தென்றல்தவழ் சோலை
ஒன்றின் புல்வெளியில்
ஒருக்களித்து உறங்கிய
என்னைத் தழுவினாள்
ஒலியின்றி வந்தவளும்
ஒய்யார மங்கையவள்
வடித்திட்ட ஓவியமவள்
செதுக்கிட்ட சிற்பமவள்
கனவெனும் கன்னியவள் !

நனவென்று நான்நினைத்து
நங்கையின் அழகுகண்டு
நாணமுற்ற அவள்முகத்தை
நாசுக்காய் நான்ரசித்ததை
நோக்குற்று மகிழ்ந்தவளை
நோட்டம்விட்டுப் பார்த்தவளை
மதிப்பீடுதான் செய்கிறாளா
மறுபரிசீலனை செய்கிறாளா
என்றெண்ணி இருக்கையில்
எறும்பொன்று எனைக்கடிக்க
எழுந்திட்டேன் எரிச்சலுடன்
வலிதாங்கா நிலையாலும்
வலியவந்தவள் சென்றதாலும்
வந்தகனவும் கலைந்ததாலும் !!!

பழனி குமார்
09.12.2019

எழுதியவர் : பாணி குமார் (9-Dec-19, 10:28 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1568

மேலே