வேத்தவை காவார் மிகன்மக்கள் - நீதிநெறி விளக்கம் 26

நேரிசை வெண்பா

வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் - மாத்தகைய
அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கைக் களிறு. 26

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

பெருமையையுடைய வீட்டினுள் இருப்பது பூனை, அப்பெருமை யில்லாத தலைவாயிலில் இருப்பது கட்டுத் தறியை முறித்து விடக்கூடிய வலிமையுடைய யானை;

என்றாலும் வீட்டினுள் இருப்பதனால் பூனைக்கும், வெளியில் இருப்பதனால் யானைக்கும் யாதொரு பெருமை சிறுமையும் இல்லை:

ஆகவே, மேன்மக்கள், அரசனுடைய அவையில் இருந்தால்தான் பெருமை வருமென்று நினைத்து, அந்த அரசவையைக் காத்துக் கொண்டிருக்க மாட்டார்: அதனால் அவர்க்கு வருத்தமென்பதும் ஒன்றில்லை:

அம்மேன்மக்களுக்கு வேறான வேறு சிலர், அஃதாவது கீழ்மக்கள், அவ்வரசவையைக் காத்துக் கொண்டிருந்ததனால் ஏதும் மகிழ்ந்து விடவுமாட்டார்.

விளக்கம்:

வேந்து அவை எனப்படுவது எதுகை நோக்கி வலித்து வேத்தவை எனப்பட்டது.

காவார், காத்தது என்பன அரசனிடத்தில் அலுவல் பெறாதிருத்தலையும் பெற்றிருத்தலையும் குறித்தன.

அலுவலைக் காவார் காத்து என்னுஞ் சொற்களாற் கூறினார்; அவ்வலுவல் அரசனிடத்ததே யானாலும் காத்துக் கிடப்பதாகிய இழிவையுடைத்தேயாம் என்றற்கு, மாத்தகைய அந்தப்புரம் என்றார்.

பிறரெல்லாம் கிட்டுதற்கு அரிதான பெருந்தன்மையுடைய வீட்டின் உள் அறை என்க. அஃது எல்லாரும் கிட்டுதற்கு அருமையான அரசவைக்கு உவமையாக வந்தது.

பூட்கை - வலிமை. இஃது இப்பொருட்டாதல் ”ஓடாப்பூட்கை” என்றவிடத்துக் காண்க.

கருத்து: அறிஞர்கள் எங்கிருந்தாலும் அவர்கட்கு மதிப்புண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-19, 11:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே