வேத்தவை காவார் மிகன்மக்கள் - நீதிநெறி விளக்கம் 26
நேரிசை வெண்பா
வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் - மாத்தகைய
அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கைக் களிறு. 26
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
பெருமையையுடைய வீட்டினுள் இருப்பது பூனை, அப்பெருமை யில்லாத தலைவாயிலில் இருப்பது கட்டுத் தறியை முறித்து விடக்கூடிய வலிமையுடைய யானை;
என்றாலும் வீட்டினுள் இருப்பதனால் பூனைக்கும், வெளியில் இருப்பதனால் யானைக்கும் யாதொரு பெருமை சிறுமையும் இல்லை:
ஆகவே, மேன்மக்கள், அரசனுடைய அவையில் இருந்தால்தான் பெருமை வருமென்று நினைத்து, அந்த அரசவையைக் காத்துக் கொண்டிருக்க மாட்டார்: அதனால் அவர்க்கு வருத்தமென்பதும் ஒன்றில்லை:
அம்மேன்மக்களுக்கு வேறான வேறு சிலர், அஃதாவது கீழ்மக்கள், அவ்வரசவையைக் காத்துக் கொண்டிருந்ததனால் ஏதும் மகிழ்ந்து விடவுமாட்டார்.
விளக்கம்:
வேந்து அவை எனப்படுவது எதுகை நோக்கி வலித்து வேத்தவை எனப்பட்டது.
காவார், காத்தது என்பன அரசனிடத்தில் அலுவல் பெறாதிருத்தலையும் பெற்றிருத்தலையும் குறித்தன.
அலுவலைக் காவார் காத்து என்னுஞ் சொற்களாற் கூறினார்; அவ்வலுவல் அரசனிடத்ததே யானாலும் காத்துக் கிடப்பதாகிய இழிவையுடைத்தேயாம் என்றற்கு, மாத்தகைய அந்தப்புரம் என்றார்.
பிறரெல்லாம் கிட்டுதற்கு அரிதான பெருந்தன்மையுடைய வீட்டின் உள் அறை என்க. அஃது எல்லாரும் கிட்டுதற்கு அருமையான அரசவைக்கு உவமையாக வந்தது.
பூட்கை - வலிமை. இஃது இப்பொருட்டாதல் ”ஓடாப்பூட்கை” என்றவிடத்துக் காண்க.
கருத்து: அறிஞர்கள் எங்கிருந்தாலும் அவர்கட்கு மதிப்புண்டு.