இன்னொரு தாய்மடி நீயடி

பொன் அந்தி நிலவொளியில் நாம்!
உன் குழல் கலைத்து ஆடுது காற்று!
முழுமதி மறைக்கும் கார்மேகமாய்..
முகமதில் தவழும்
கேசநாண்களின் தனி சுவரங்கள்..!
உன் கைவிரல்கள் அதை செவிமடலொடு...
இணைத்து மீட்டும் போதெல்லாம்...
என் உயிர்குழலில் கசியுதடி அமுதகானம்..!

அதிகாலைப்பூவாய் மலர்ந்த உன் மென்முகம்!
நாட்டியமா? வியக்கவைக்கும் உருளும் உன்விழிகள்!
அவ்வெப்போது என்நெஞ்சோடு
கவிதை எழுதும் உன்கூந்தல்!
கெஞ்சலும் கொஞ்சலுமாய் உளறும் உன் செவ்விதழ்கள்!
காதல் மழையில் முழுதாய் நான் நனைய...
மரத்துப்போன உணர்வுகள்
மீண்டும் மகிழ்வுடன் என்னில்..!

அருகாமையில் உனை இரசிக்க...
ஓராயிரம் கவலைகளும்
உன் மௌனப் புன்னகையில் கலைந்தேபோகுது!
உயிரென நிதம் நினைத்து உண்மை உறவாய்
உறவாட வந்தவள் இவள்மட்டுமே
இதயம் சொல்லியது!
கண்களில் நீர்கசிய உன்மடியில் தலைசாய்க்க...
உன் மெல்லிய விரல்கள் தலைகோதிவிடும்
அன்பில் உணர்ந்தேன்...
எனக்கு இன்னொரு தாய்மடி நீயடி..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (17-Feb-20, 11:34 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 331

மேலே