வண்ணப் பாடல் அம்மன்

தனதாத்த தன்ன தனதாத்த தன்ன
தனதாத்த தன்ன தனதானா ( அரையடிக்கு )

அடியார்க்கு நன்மை களையூட்டு மம்மை
அறிவூட்டி மின்ன லொளிபோலும்
அருளூட்டி யென்னை வினைதாக்கு முன்னம்
அணைபோட்ட தென்ன பரிவோடே!

கொடியோர்க்கு வன்ம குணம்மாற்று மன்னை
கொலுவீற்ற தெண்ணி நெகிழ்வேனே!
குதிபோட்டு மண்ணி விதிமாற்றி நம்மின்
கொடும்பாட்டை யுன்ன மறவாளோ?

மடிபோட்டு வண்ண மலர்சூட்டி விண்ணின்
மதிகாட்டி யுண்ண வமுதீயும்
மயல்நீக்கி விம்மு மொலிகேட்டு முன்னல்
மகிழ்வூட்டி யென்னு ளுறைவாளோ?

உடைமாற்றும் பொம்மை விளையாட்டி லொன்னி
ஒருகூட்டி லன்னை யெனநீயே
உருவேற்றி நுண்மை மதிசேர்த்த பின்னம்
உயர்வீட்டி லென்னை விடுவாயே!!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:29 am)
பார்வை : 43

மேலே