நல்வழி காண்பீர்

கயிறெடுத்துச் சுருக்கிட்டுக் கழுத்தினிலே மாட்டிக்
-காலனுக்கு அழைப்பிதழைக் கைநீட்ட லாக
உயிரடங்கு மெனவறிந்தும் உல்லாச மாக
-ஊரடங்கு நேரத்தில் ஊர்சுற்று வோரே
வயிறெரியும் பசிக்கொடுமை வாட்டுகின்ற ஏழ்மை
-வந்துநிற்கும் போதினிலும் வாசலினைத் தாண்டா
துயிர்க்காக்கும் எளியவர்கள் துணிச்சலறிந் திந்நோய்த்
-தொற்றிதனை பரப்புதற்குத் துணைபோகா தீரே!
**
பாதுகாப்பு தனைவழங்கப் பாடுபடும் அரசின்
-பக்கபல மாயிருக்கும் படியும்மை ஆக்கும்
போதுவரும் நிம்மதிக்குப் பொறுப்பாளி என்றே
-பொதுநலத்திற் குதவிடுங்கள் புண்ணியமாய்ப் போகும்
காதுவழி கேட்டும்மைக் காப்பதற்குச் சொல்லும்
-கருத்துகளை கேட்டுணர்ந்து கவனமுறும் போது
தூதுவிடும் காலனவன் தொடுவதில்லை பாரீர்
-தொல்லையது அகல்வதற்கு நல்லவழி காண்பீர்
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-May-20, 11:50 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 68

மேலே