எங்கே போனது மனித நேயம்
நேற்றுவரை கறவை மாடு அது
இன்றோ பாவம் முதுநிலையில்
பால் தரும் காம்புகள் சுருங்க
பசு கரவா பசு ஆனது
இதோ அவன் அதை அடித்து
மேய்த்துக்கொண்டு போகிறான்
மேய அல்ல .... பசு வதைக்கு
பசுவின் புலால் உண்பார்க்கு
இரையாக்க.....
பிறப்பும் தந்து பேணி வளர்த்து
அருந்தவப் புதல்வன் இவன் என்று
ஊருக்கெல்லாம் அறிவித்து பெருமையில்
திளைத்த பெற்றோரை ...
முதுமை எய்திய அவர்களைக்
கொஞ்சம் அன்பும் பாசமும் தந்து
காக்க தவறிய பிள்ளை....
பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு.
என்னே இந்த மனித நேயம்
நல்லதை எல்லாம் நண்பனிடம்
பெற்றடைந்து இன்புற்று அவனுக்கு
துன்பம் வந்தடைய அவனை
விட்டு மாயமாய் மறையும்
தீய நட்பு......
என்னே மனித நேயம்
இந்த நம் செழித்திருந்த நன்னாட்டை
துண்டு துண்டாய் சிற்றரரசர்கள் பலர் ஆள
எங்கிருந்தோ வந்து சேர்ந்த அன்னியர்க்கு
அடிமையாய் காட்டிக்கொடுக்கும் துரோகியாய்
மாறி நாட்டையும் வீட்டையும் மாற்றிய
வீணர்கள்.......
என்னே மனித நேயம்
தாய் இழந்த புலிக்குட்டிக்கு
அனைத்து பால் தந்ததாம் பெண்சிங்கம்
'டிஸ்கவரி' அலைவரிசையில் செய்தி
விலங்கின் தயைக்கூட மனிதரிடம்
இல்லாமல் போகிறதோ......
கொஞ்சம் உட்கார்ந்து த்யானிப்பாய்
உன்னையே கொஞ்சம் உணர பாரு
மனித நேயம் துளிர்த்து மீண்டும் மலரும்
நாளை நல்லோர் நாடாள்வார்