குமரேச சதகம் – தாழ்தல் பெருமை - பாடல் 84

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேங்கைகள் பதுங்குதலும் மாமுகில் ஒதுங்குதலும்
விரிசிலை குனிந்திடுதலும்
மேடம தகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும்
வெள்விடைகள் துள்ளிவிழலும்

மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும்
முனிவர்கள் நயந்துகொளலும்
முதிர்படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும்
முதலினர் பயந்திடுதலும்

ஆங்கரவு சாய்குதலும் மகிழ்மலர் உலர்ந்திடலும்
ஆயர்குழல் சூடுபடலும்
அம்புவியில் இவைகா ரியங்களுக் கல்லாமல்
அதனால் இளைப்புவருமோ

மாங்கனிக் காவரனை வலமது புரிந்துவளர்
மதகரிக் கிளையமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 84

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலம் வந்து வாழும் யானை முகத்தவருக்குத் தம்பியான முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

புலிகள் பதுங்கி (ஒளிந்து) இருத்தலும், பெரிய மேகக்கூட்டங்கள் விலகுவதும், நீண்ட வில் வளைதலும், ஆட்டுக்கடாக்கள் பின்செல்லுதலும், யானைகள் அடங்கலும், வெண்மையான காளைகள் துள்ளுதலும்,

மூங்கில்கள் வளைதலும், பெரியோர்கள் ஒத்துப் போதலும், முனிவர்கள் (வெறாமல்) அன்பு காட்டலும், வலிமையில் முற்றிய சேனை விலகிச் செல்லுதலும், இடையூறு செய்வோர் அமைதியாதலும், தலைவர்கள் அஞ்சுதலும்,

பாம்பு அடங்குதலும், மகிழம்பூ வாடுவதும், இடையரின் குழல் சுடப்படுவதும் இவைகளெல்லாம் (பிற்காலத்திற்) காரிய சாதனைக்கே யன்றி உலகில் இச்செயலால் தாழ்வு உண்டாகுமோ?

கருத்து:

வேங்கை முதலானவை பின்வாங்குதல் பிறகு பலன் அடையவே யென்று நினைத்தல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-20, 9:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே