கோட்டானைக் கொடு

தெருவில் நின்ற ஒரு சிறுவனைக் கவி காளமேகம் அன்புடன் பார்க்க, அச்சிறுவனின் தாயாருக்குத் தன் மகன்மீது திருஷ்டி பட்டுவிடப் போகிறதே என்ற பயம் ஏற்பட்டு விடுகிறது. ‘உன்னைக் கொடுக்க' என்ற, அவள் கை நெறிக்கக் கவிஞர் சினங் கொண்டு இவ்வாறு பாடுகின்றார்.

நேரிசை வெண்பா

என்னைக் கொடுத்தால் இரக்கமுனக்(கு) உண்டாமோ
வன்னக் கமலமுக வல்லியே! - துன்னுமதக்
காட்டானைக் கோட்டுமலைக் காரிகையே! நீபயந்த
கோட்டானைத் தானே கொடு. 174

கவி காளமேகம்

பொருளுரை:

அழகிய தாமரை மலரினைப் போன்ற முகத்தினை உடையவளே! மிக்க மதம் பொழியும் காட்டு யானையின் கொம்பினைப் போன்ற தனங்களையுடைய அழகியே! என்னைச் சாகக் கொடுப்பதனால் உனக்கு எத்தகைய இரக்கமும் என்னிடத்தே உண்டாகுமோ? அதனால், நீ பெற்ற கோட்டான் இருக்கிறதே, அதனையே எமனுக்குக் கொடுப்பாயாக, அப்போது தான் உன் செருக்கு அடங்கும்.

'திருஷ்டி தோஷம் பட்டால் சிறுகுழந்தைகள் நோயுற்று மடிந்துவிடும்’ என்றொரு நம்பிக்கை. அந்தத் திருஷ்டிக்கு உடையவரைக் குறித்து கைநெறித்தால் அந்தத் தோஷம் அவரைத் தாக்கி அழித்து விடும், குழந்தைக்கு ஆபத்தில்லை என்பதும் ஒரு நம்பிக்கை. இவற்றினால் வந்துற்றதே தாயின் கைந்நெறிப்பும் சொல்லும் ஆகும். அவள் பேதைமையைச் சுட்டிக் கவிஞர் பாடிய செய்யுள் இது.

கோட்டான் - கோட்டான் போன்ற பிள்ளை எனவும், பால் குடித்துக் கொண்டிருக்கும் பாலன் எனவும் பொருள் படுவதாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Aug-20, 10:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே