பிறந்தநாள் வாழ்த்து
வான் மழையென பெண்ணொருத்தி
நீல வண்ணச் சேலை உடுத்தி
கருங்கூந்தல் கேசமதில்
மின்னலென வகிடெடுத்து
வட்டநிலா முகமதில்
நட்சத்திர பொட்டு வைத்து
பால்வெளி சிரிப்புதிர்த்து
மேளமென இடி முழங்க
சாரலென கரகோஷம் பரவ
வானவில்லால் குழைத்து செய்த
மலர்ச்செண்டொன்றை என் கரங்களில் நீட்டி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாள்
மலர்ச்செண்டை வாங்குகையிலே, தவறுதலாக, அவள் தேகத்தில் பட்ட என் கரத்தில், சூடு பரவ, அதிர்ந்து வினவினேன்
"உன் தேகத்தில் ஏன் இத்தனை சூடு?"
பால் பொங்க சிரித்தவள், சூரியனில் குளித்ததாகக் கூறி விடைபெற்றாள்